இந்த தார் ஜீப்பில் போய்தான் அட்டூழியம் பண்ணாராம்.. சர்வீஸ் சென்டரில் நின்ற ஞானசேகரனின் கார் பறிமுதல்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருடச் செல்ல பயன்படுத்திய அவரது தார் ஜீப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்ததில் அவரது இடது காலும் இடது கையும் முறிந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு, விசாரித்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா டைப் தனி வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை கைது செய்து 3 நாட்கள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை அடித்த பணத்தில், தான் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குற்ற வழக்குகளிலும் ஞானசேகரன் சிறையில் அடைக்கப்படும்போது அவரை ஜாமீனில் எடுக்க தனியாக வழக்கறிஞர்கள் குழுவினர் செயல்பட்டு வந்துள்ளனர். அந்தளவுக்கு செல்வாக்குடன் செயல்பட்ட ஞானசேகரன், பெரும்பாலும் வில்லா டைப் வீடுகளைக் குறி வைத்துத் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
கொள்ளையடிக்கச் செல்லும் வீடுகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் தார் ஜீப், கிண்டியில் உள்ள சர்வீஸ் செண்டர் ஒன்றில் இருந்த நிலையில், அதனை பள்ளிக்கரணை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications