அண்ணா பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்.. பதிவாளர் உட்பட பல அதிகாரிகள் நீக்கம்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முறைகேடு குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு, அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ. பிரகாஷ் உள்ளிட்ட பல அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தார் வேல்ராஜ். இவர் 3 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தாராக பதவி வகித்த நிலையில், கடந்த 2024இல் அவருடைய துணைவேந்தர் பதவி முடிவடைந்தது. இருப்பினும் அவருக்கு ஓய்வுபெறும் வயது இல்லாததால் தொடர்ந்து அங்கு பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

வேல்ராஜ் துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் ஜூலை 31 அன்று பணி ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் முறைகேடு விவகாரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் ஓய்வுபெறும் நாளில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, வேல்ராஜ் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்தார். அதில் வேல்ராஜ் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தும், அவருக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வேல்ராஜை சஸ்பெண்ட் செய்த அரசு உத்தரவுக்கு எதிரான ஆளுநரின் முடிவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வேல்ராஜுடன் பதிவாளர் பிரகாஷ் மற்றும் 12 அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தும் முறைகேடு புகாரில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடாது என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆட்சேபணை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பதிவாளர் பதவியில் இருந்து பிரகாஷ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications