சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி- அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு வந்த பிரதமருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. நேரு விளையாட்டரங்கில் பிரதமர் பங்கேற்ற விழாவில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை.
பிரதமருக்கே பாதுகாப்பு வழங்காத இந்த அரசு சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும். பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய அரசு முகமை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அனைத்து கோயில்களிலும் மெட்டல் டிடெக்டர் வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
மங்களூர் குண்டுவெடிப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் பிரஷர் குக்கரில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இது தீவிரவாத தாக்குதல் என கர்நாடக மாநில டிஜிபி தெரிவிக்கிறார். ஆனால் தமிழகத்தில் கோவையில் நடந்த சம்பவத்தை நம் அரசு இன்னமும் கார் வெடிப்பு சம்பவம் என்றே கூறி வருகிறது. குண்டுவெடிப்பு என சொல்வதற்கு கூட தைரியம் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் ஆளுநர் மீது தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது.
வீடு திட்டத்தில் முறைகேடு
மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடு திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நடந்துள்ளது. வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பகுப்பாய்வு செய்ய கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது கவர்னரின் கடமை. கவர்னர் வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என்றார் அண்ணாமலை. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ரவியின் பார்வைக்கு அனுப்பி அந்த மசோதா காலாவதியானது. ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் போகும் நிலையில் ஆளுநர் அலட்சியம் காட்டுவது ஏன் என தமிழக அரசு, பாமக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்டவை கேள்வி எழுப்பியிருந்தன.
செஸ் ஒலிம்பியாட்
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதன் துவக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. முதல்முறையாக உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிகழ்ந்ததால் சென்னையே விழாக்கோலம் பூண்டது. இந்த தொடக்க விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அவர் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். அவருடைய அங்கவஸ்திரம் செஸ் கட்டங்களை போல் கருப்பு, வெள்ளையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்குத்தான் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை புகார் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஒரு விழாவுக்கு சென்ற பிரதமர் மோடி பயணிக்கும் வழித்தடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரின் வழித்தடம் என தெரிந்தே பஞ்சாப் மாநில அரசு பாதுகாப்பில் குளறுபடி செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.