திருமணத்திற்கு போகணும்.. அமித் ஷா ஆலோசனையில் பங்கேற்க டெல்லி செல்லாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்!
சென்னை: அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால், டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடக்கும் பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செய்ய இயலவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்ததாக கூறிய அண்ணாமலை, சொந்த பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி ஏப்ரல் மாதம் அமைந்தது. அதன்பின் அதிமுக - பாஜக இணைந்து ஒரு போராட்டத்தைக் கூட நடத்தாத நிலையில், தொண்டர்கள் மத்தியில் கூட்டணி இணைப்பு ஏற்படவில்லை. இதனால் இரு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தக் கட்டத்தை திட்டங்களை மேற்கொள்ள ஆயத்தமாகினர்.

பாஜக தரப்பில் பூத் கமிட்டி வலிமையாக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பாஜக தொண்டர்கள் பங்கேற்க தொடங்கினர். அதேபோல் மத்திய அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழக பாஜகவை வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய பணிகளை கூறுவதோடு, அதனை ஆய்வும் செய்து வருகிறார்.
இதன் மூலமாக மோடி - அமித்ஷா கூட்டணி தமிழக அரசியலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களை டெல்லி மேலிடம் அவசரமாக அழைத்தது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க எல்.முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் டெல்லிக்கு சென்றனர். டெல்லியில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடந்து வரும் நிலையில், அண்ணாமலை இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அண்ணாமலை தரப்பில், அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் சொந்த வேலைகள் இருப்பதால் டெல்லிக்கு செல்ல இயலவில்லை.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி விவகாரம், தமிழக பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேபோல் முதற்கட்ட தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச உள்ளதாக கூறப்பட்டது.
கடந்த முறை பிஎல் சந்தோஷ் தமிழ்நாடு வந்தபோதே, அண்ணாமலை குறித்து நயினார் நாகேந்திரன் புகார் அளித்திருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் கடந்த சில மாதங்களாக அண்ணாமலை ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். இதனால் உட்கட்சி பூசல் விவகாரம் குறித்த ஆலோசிக்கும் கூட்டத்தை அண்ணாமலை வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன












Click it and Unblock the Notifications