இதான் கர்நாடக போலீஸ்.. தமிழக போலீசோ? கோவை கார் VS மங்களூரூ ஆட்டோ வெடிப்பு - ஒப்பிட்டு சாடிய அண்ணாமலை
சென்னை: கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடித்து சிதறிய சம்பவம் பயங்கரவாத செயல் என அம்மாநில டிஜிபி அறிவித்து இருப்பதை பாராட்டி உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோவை கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபடுத்தி விமர்சித்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஒரு ஆட்டோ வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநரும் பயணி ஒருவரும் படுகாயமடைந்தார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்த வீராங்கனை பிரியா நினைவாக.. கால்பந்து தொடர்- பாஜக அண்ணாமலை தகவல்
கர்நாடக டிஜிபி
ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக டிஜிபி பரிவீன் சூட் தனது ட்விட்டரில் இது குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். அதில், "நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை.
பயங்கரவாத செயல்
பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட 'பயங்கரவாதச் செயல்.. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டு உள்ளார்.
அண்ணாமலை பதிவு
மங்களூரூ அட்டோ வெடிப்பு பற்றி கர்நாடக டிஜிபி வெளியிட்டு இருக்கும் அந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்து இருக்கும் அண்ணாமலை, "குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
திமுக அரசு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதலுக்குப் பிறகு உயர் காவல் அதிகாரிகளை பொய் சொல்ல வைத்து குண்டு வெடிப்பு சம்பவங்களை எவ்வாறு கையாளக் கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது திறனற்ற திமுக அரசு." என்று அவர் விமர்சித்து இருக்கிறார்.
கோவை கார் வெடிப்பு
கடந்த மாதம் 23 ஆம் தேதி அதிகாலை கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார்.
பழைய கார்
ஜமேஷா முபின் ஓட்டிவந்த சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த கார் இதற்கு முன் 10 பேரிடம் கைமாறியது விசாரணையில் தெரியவந்தது. அந்த காரில் ஆணிகள், பால்ரஸ்கள் இருந்ததாகவும் டிஜிபி கூறி இருக்கிறார்.
வெடி பொருட்கள்
ஜமேஷா முபின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது விபத்தா? அல்லது சதிவேலையா? என்பது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டது. இறந்த நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ.வால் விசாரணை செய்யப்பட்டவர்.
என்.ஐ.ஏ விசாரணை
இந்த வழக்கில் ஜேமேஷா முபினுக்கு தொடர்புடைய 6 பேரை கைது செய்த போலீசார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இருக்கிறது.