திடீர் அழைப்பு டெல்லி பறந்த அண்ணாமலை : இதுதான் காரணமா?
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அகில இந்திய தலைவருடன் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் டெல்லியிலிருந்து திடீர் அழைப்பு வர உடனடியாக இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டதன் காரணமாக சில விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு
அண்ணாமலை..அண்ணாமலை
தமிழக பாஜக தலைவராக வந்தபின்னர் பிரபலமடையும் தலைவர்கள் மத்தியில் வரும்போதே பெருத்த வரவேற்புடன் வந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பதவிக்கு குட்பை சொல்லி இளைஞர்களை திரட்டி இயக்கம் ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்னவர் மெல்ல பாஜக பக்கம் சாய 8 மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தது முதல் பரபரப்பு காட்டினார். ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். முருகன் மத்திய இணை அமைச்சராக்கப்பட இளரத்தம் தேவை என்பதால் 8 மாத அனுபவம் உள்ள அண்ணாமலை மாநில தலைவராக்கப்பட்டார். இது அவருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் தந்துள்ளது. பாதகத்தை எப்படி வெல்வார் என்பது அவர் பிரச்சினை. சாதகம் என்னவென்று பார்ப்போம்.
அதிமுக எனும் பெரும் யானை...அங்குசத்தில் அடங்குகிறதா?
அதிமுகவின் மிகப்பெரிய பலம் அதன் வாக்கு வங்கி. கிட்டத்தட்ட 40% வரை இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக சிதறாமல் நிற்பதற்கு முக்கிய காரணம் 4 ஆண்டுகள் கட்சி ஆட்சியிலிருந்ததே. ஆனால் அதிமுக எனும் கட்சி மக்களிடத்தில், அதன் லட்சக்கணக்கான தொண்டர்களிடத்தில் செல்வாக்கை தக்க வைக்க கட்சித்தலைமை பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பேரரசன் மறைந்தப்பின் சிற்றரசன் போல் மண்டல வாரியாக தலைவர்கள் இருக்கிறார்கள், தமிழகத்துக்கான தலைவராக யாரும் இல்லை என்பது விமர்சனமாக உள்ளது. இதன் விளைவு பெரும் காட்டுயானை அங்குசத்துக்கு அடங்குவதுபோல் தனித்தன்மை இழக்கத்தொடங்கியுள்ளது.
தமிழிசை, முருகனுக்கு கிடைக்காத வாய்ப்பு அண்ணாமலைக்கு
அதிமுக ஜெயலலிதாவுக்குப்பின் பாஜகவிடம் நெருங்கியது. அதை பாஜக பயன்படுத்திக்கொண்டது. 2017-ல் அதிமுக தலைமை இருந்த அளவுக்கு இன்று உள்ளதா என்றால் இல்லை. வெளியில் ஒற்றுமை காட்டினாலும் உள்ளூர பெரும் நெருப்பு கனன்றுக்கொண்டிருக்கிறது. எரிமலை எப்போது வெடிக்கும் என்பதே கேள்வி. தமிழிசையும், முருகனும் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்ததால் ஒற்றுமை ஏதோ ஒரு வகையில் கட்டுப்பாடாக இருந்தது. தற்போது ஆட்சியில் இல்லாத, 65 சீட்டுகள் வென்றாலும் நம்பிக்கை இல்லாத இரட்டைத்தலைமையால் ஆடிப்போயுள்ளது. இது அண்ணாமலைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழகத்தில் வேகமெடுக்கும் பாஜகவின் செயல்பாடு
தமிழகத்தில் திமுக வென்றது, திராவிடம் வென்றது என கோஷமிடுபவர்கள் மற்றொருபுறம் சத்தமில்லாமல் பாஜக வேகமெடுப்பதை நம்ப மறுக்கிறார்கள். ஒரு கட்சி வளர்வது அதன் வளர்ச்சியில் மட்டுமல்ல மற்றொருகட்சி வீழும்போது அதன் இடத்தை நிரப்புவதன் மூலமாகவும் அது நடக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதற்கு சிறந்த உதாரணம் மேற்கு வங்கம், டெல்லி மாநிலங்கள் தான். அங்கு ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்த காங்கிரஸ் என்ன ஆனது. அந்த இடத்தை பாஜக நிரப்பியது. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி எங்கே போனது என்றே தெரியவில்லை. டெல்லியிலும் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி வலுவிழக்க பாஜக அங்கு காலூன்றியுள்ளது.
தமிழகத்திலும் பாஜக காலூன்றுமா?
பாஜக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி. அதிமுக செய்யும் வேலையை நாங்கள் செய்கிறோம் என அண்ணாமலை சொல்வது கேலியாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அது ஒரளவு உண்மை என்பதை மேற்சொன்ன மே.வங்கம், டெல்லி அரசியலை எடுத்துக்கொள்ளலாம். அதிமுக பலவீனமடைவதற்கு காரணமே அதன் திமுக எதிர்ப்பு, சொந்த பாதையில் செயல்படும்போக்கு இரண்டையும் கைவிடுவதுதான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். இதற்கு காரணம் அதன் வலுவற்ற தலைமையே. இது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. நிர்வாகிகளையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதான் பாஜகவுக்கு தேவை
இதைத்தான் நேரம் பார்த்து நெருங்கும் பாஜக எதிர்ப்பார்த்து இருந்தது. அது எல்லா கட்சிகளுக்கும் உள்ள உரிமை. அதிமுகவுக்குள் நடக்கும் மோதல்கள் பாஜகவுக்கு எப்படி சாதகமாகும், சாதகமாக்கணும் என்பதை பாஜக மேலிடம் ஆராய தொடங்கிவிட்டது. அதன் வெளிப்பாடே நட்டாவின் பேச்சு, அண்ணாமலையின் பேச்சு என்கின்றனர். அதிமுகவிலிருந்து இன்னும் பல முக்கியஸ்தர்கள் விலகும் காலமும் வரலாம் அது மேலும் அதிமுகவை பல்வீனப்படுத்தும்முன் விழித்தெழ வேண்டியது அதிமுகவின் தலைமை என்பது பெரும்பாலான அதிமுக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது.
அண்ணாமலையின் டெல்லி பயணம்
அதிமுகவின் கோட்டைக்குள் விரிசல் ஆரம்பித்துள்ளதை நேற்றைய கூட்டத்தில் காணமுடிந்தது. செய்தியாளர்களின் கேள்விக்கு எதையும் தாங்கி பதில் சொல்லும் ஜெயக்குமார் போன்றோரே முதலில் சில விஷயங்கள் பேசும்போது வாதம் வந்தது, 4 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டத்தை நடத்தினோமா இல்லையா என்று சமாளிக்கத்தான் முடிந்தது. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் இரு தலைமைகளும் இணைந்து ஒரு பேட்டி கொடுக்க முடியாத சூழலைத்தான் அங்கு காண முடிந்தது.
பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வருகிறது
இத்தகைய நிலையில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதை அனைவரும் உற்று நோக்குகிறார்கள். பாஜக மட்டத்தில் அண்ணாமலையின் டெல்லி பயணம் அவர் பாஜகவின் மாநில, மாவட்ட அளவிலான பட்டியலை அளித்திருந்தார் அதை இறுதிப்படுத்தவும் , சில அசைன்மெண்ட்கள் கொடுக்கவும் அழைத்திருக்கலாம் என்கின்றனர். ஆனால் பாஜக அதிமுகவின் இப்போக்கை சாதகமாக்கி களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளதையே அண்ணாமலையின் டெல்லி பயணத்தின் நோக்கமாக உள்ளது என்ற கருத்தே அதிகம் வைக்கப்படுகிறது. வரும் காலங்களில் பாஜகவின் நகர்தல் இதை புரியவைக்கும்.