ரோம் எரியும்போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர்.. முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றதை விமர்சித்த அண்ணாமலை!
சென்னை: 'ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தார்' என்ற புகழ்பெற்ற பழமொழி, முதல்வர் ஸ்டாலின் செயலால் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என காட்டமாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்தும், மின்சார சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் ஸ்டாலின்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். மேலும், மத்திய அரசிடம் கோரிய நிவாரணத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறும் அவர் வலியுறுத்த உள்ளார். மேலும், தென் மாவட்ட கனமழை பாதிப்பு, மீட்பு, நிவாரண பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை டெல்லியில் இருந்து நேரடியாக விமானம் மூலம் தூத்துக்குடி செல்லவுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளதால், மீட்பு, நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டபடி டெல்லி சென்றார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளதை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை காட்டம்: இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கண்காணித்து களத்தில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளார்.
'ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தார்' என்ற புகழ்பெற்ற பழமொழி, ஸ்டாலின் செயலால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இருக்கும் போது பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது அவரது உண்மையான பயண நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட கடைசி நிமிட ஏற்பாடாகும்.
26/11 மும்பை தாக்குதலின்போது, அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் ஓபராய் ஹோட்டலுக்கு வெளியே திரைப்பட தயாரிப்பாளரை அழைத்து வந்தார். அதேபோன்று, வெள்ள நிவாரணத்தை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன், திரைப்பட இயக்குனர் ஒருவருடன் ஆய்வு செய்து வருகிறார். மாநில அரசின் நிவாரணம் என்பது தென் தமிழக மக்களுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கிறது." எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications