இனியும் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பில் நீடிக்கலாமா? பாஜக நிர்வாகி படுகொலையால் கொந்தளித்த அண்ணாமலை!
சென்னை: சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற இயலாத ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது பைக்கில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்வகுமார் நேற்று இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை தமிழக பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் செல்வகுமார் அவர்கள், நேற்று இரவு, சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை.. அடுத்தடுத்து 3 கொலைகள்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு!
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது. அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத்தனத்தைத் தொடரும் ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications