பாஜக கூட்டணியில் அதிமுக இல்லையா? லீடர்கள் பேச்சால் சலசலப்பு! “ஸ்டாப்!” வாய்ப்பூட்டு போட்ட அண்ணாமலை!
சென்னை : தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஒப்புதல் பெற்றே கட்சி நிர்வாகிகள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
சமீபமாக, அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இரு கட்சிகளின் நிர்வாகிகள் பேசி வரும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிமுக தனித்துப் போட்டியிடவும் தயார் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்.
அதேபோல, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர், அதிமுக கூட்டணி பற்றி நேர்காணல்களில் பேசும்போது, அதிமுக கூட்டணி இல்லை என்றாலும் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகளையும் விமர்சித்துப் பேசி வந்தனர்.
இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், கூட்டணி தொடர்பாக சொந்த கருத்துக்களை பேசக் கூடாது என மாநில தலைவர் அண்ணாமலை கட்டுப்பாடு விதித்துள்ளார்.

யூடியூப் சேனல்கள்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் சமூக வலைதளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகிறது. நமது கருத்துக்களை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் உதவுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி
ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாஜக சார்பில் நேர்காணல் வழங்கி வரும் நிலையில் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்கள் சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பற்றியும் கட்சியில் உள்ள சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொளியை காணும் மக்களுக்கு இது பாஜகவின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்து சென்று விடுகிறது.

ஒப்புதல் பெற்ற பிறகே
பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக கட்சி சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நடவடிக்கை எடுக்கப்படும்
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதை பாஜக மாநில ஊடக பிரிவின் தலைவர் ரங்கராயக்கலுவிடம் தெரியப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல் வழங்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications