“பாஜக ஒன்றும் ஏமாறும் கட்சியல்ல” எடப்பாடி பழனிசாமி கேள்வி குறித்து அண்ணாமலை பதில்!
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை அளித்த பேட்டியில் பாஜக ஒன்றும் ஏமாறும் கட்சியல்ல என்று கூறியிருக்கிறார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் இருக்கின்றன. பாஜக-அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த கூட்டணி வெற்றிப்பெறும்பட்சத்தில் கூட்டணி ஆட்சியமையும் என்று பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், அதிமுக அதை மறுத்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கவலை இல்லை" என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இது பாஜக தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.
அதில், "கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளி இல்லை என தான் பேசியதில் உள் அர்த்தமோ, உள்நோக்கமோ இல்லை என்று எடப்பாடி பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்ற விமர்சனத்திற்காக எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி கலந்து பேசி முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது, "அண்ணன் நயினாரின் பேட்டியை நான் கேட்டிருந்தேன். தொலைப்பேசியில் என்னை அழைத்து அவர் பேசியிருந்தார் என்றும், வேறு பொருளில் பேசியதாக விளக்கமளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். எனவே இந்த விஷயத்தை நான் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன்.
ஆனால், இந்த தருணத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பாஜக ஏமாற்றும் கட்சி கிடையாது. அதேநேரம் பாஜக ஏமாற்றும் கட்சியும் கிடையாது. யாரையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில்லை. அதே நேரத்தில் நாங்களும் ஏமாற மாட்டோம். தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறிய பிறகு இதைப்பற்றி நான் இதற்கு மேல் பேசினால் சரியாக இருக்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications