ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் புதைக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் பிஎஸ்பி முறையீடு
சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட தங்கள் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என்று, பகுஜன் சமாஜ் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.
கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று மாலை சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கண்டனம்: ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய கட்சியின் தலைவர் பொதுவெளியில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முறையீடு: இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள தங்கள் கட்சி அலுவலகத்திலேயே புதைக்க அனுமதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இது குறித்து மாநகராட்சியிடம மனு கொடுத்ததாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் முறையீடு செய்துள்ளதாகவும் கட்சி கூறியிருக்கிறது.
இந்த முறையீட்டு மனுவை இன்றிரவே அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளித்துள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
முறையீடு ஏன்?: சமீபத்தில் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்களும், ஆதரவாளர்களும் கோயம்பேடு அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதே பாணியில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதன் மூலம் பகுஜன் சமாஜ் குறைந்தபட்சம் சென்னையிலாவது வலுவாக காலூன்ற முயல்கிறது என்ற அரசியல் விமர்சக்கள் கூறுகின்றனர்.
கைது: இந்த கொலை வழக்கில் தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வடசென்னையின் கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க், "தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?: "ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாஜக: "ஆம்ஸ்ட்ராங்கின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலையானது, சமூகத்தில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரைப் புறக்கணிப்பதையும், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்" என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications