ஊழல் என்று வந்துவிட்டால் திமுகவும் அதிமுகவும் ஒன்று தான்! அறப்போர் இயக்கம் சரமாரி குற்றச்சாட்டு!
சென்னை: எதிர் எதிர் கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் திமுகவும், அதிமுகவும், ஊழல் என்று வந்துவிட்டால் மட்டும் ஒன்றை ஒன்று காப்பாற்றிக் கொள்கிறது என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கம் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டு வருமாறு;

அறப்போர் இயக்கம்: ''அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்களை சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் 2015ம் ஆண்டு முதல் 6 வருடங்களாக டெண்டர்களை செட்டிங் செய்து வாங்கிக் கொண்டு இருந்தார்கள். இந்த மோசடியில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2021ம் வருடம் ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.''
இரண்டு வருடங்களாக: ''இதையடுத்து சட்டமன்றத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அதிமுக ஆட்சியில் நடந்த ரேஷன் ஊழல், திமுக அரசு அமைந்தவுடன் தடுக்கப்பட்டு கோடிக்கணக்கான வரிப்பணம் சேமிக்கப்பட்டது என்று அறிக்கை வாசித்தார். ஆனால் இரண்டு வருடங்களாக அந்த ஊழல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.''
நீதிமன்றம் விதித்த கெடு: ''புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையின் போது நாங்கள் விசாரித்துக் கொண்டே தான் இருக்கிறோம் என்று தமிழக அரசு தெரிவிக்க இன்னும் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.''
அரசுக்கு கேள்வி: ''இத்தனை வருடங்களாக நாங்கள் இருவரும் எதிர் எதிர் கட்சிகள் என்று சொல்லி வந்த திமுக அதிமுக கட்சிகள் ஊழல் என்று வந்துவிட்டால் மட்டும் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ஊழல் புகாருக்கும் நீதிமன்றத்தை நாடி தான் அரசாங்கத்தை வேலை செய்ய வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் அரசாங்கம் என்பது எதற்கு? இனியாவது திமுக அரசு தனது நாடகத்தை நிறுத்திக் கொண்டு அதிமுகவின் ரேஷன் ஊழல் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமா? ''












Click it and Unblock the Notifications