"நிறம்" மாறா ஆளுநர்?.. ஸ்டாலின் அப்படியெல்லாம் பேசினாரே.. "3 புள்ளிகள்" மீண்டும் குழப்பம்.. என்னாச்சு
ஆளுநர் ரவி மீதான மோதல் போக்கை திமுக இன்னமும் கடைப்பிடித்து வருகிறதாம்
சென்னை: ஆளுநர் ரவி - திமுக தரப்புக்கு இடையே இன்னமும் மோதல் போக்கும், அதிருப்தி போக்கும் இருப்பதாக கருதப்படுகிறது.. இது ஒரு பக்கம் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆளுநர் ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே, சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
ஊட்டி கவர்னர் மாளிகை சுற்றுசுவருக்கு கலர் மாற்றி பெயிண்ட் அடித்தது, தமிழகத்தில் ராமராஜ்ஜியம், என்பன உட்பட பல்வேறு முரண்பாடுகளுக்கு ஆளானபோதிலும், நீட் விவகாரம் உச்சக்கட்ட அதிருப்தியை தந்துவிட்டது. ஒருகட்டத்தில் ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும், திரும்ப அழைத்து கொள்ளுங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் சென்றுவிட்டன..
பண்பாடு - நாகரீகம்
இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசும்போது, "ஆளுநர் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் இல்லை... முதல்வரான எனக்கும் ஆளுநருக்கும் தனிபட்ட முறையில் சுமுகமாக உறவு உள்ளது. நேரில் பார்த்து பேசும்போதெல்லாம் ஆட்சியை பாராட்டி உள்ளார். பொது மேடையில் நம் ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார். ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர். தனிப்பட்ட முறையில் மரியாதை தருகிறார், நாங்களும் தருகிறோம். இது அரசியல் எல்லைகளை கடந்த பண்பாடு, இதை எப்போதும் காப்போம்" என்றார்.
ஆளுநர்
ஆளுநருக்கும், ஆளும் கட்சிக்கும் இப்படி ஒரு மோதல் போக்கு உருவாகிவிட்டதே, இதனால் மாநில வளர்ச்சி தடைபட்டுவிடுமே என்ற கவலைகள் தமிழக மக்களை சூழ்ந்து வந்த நிலையில்தான், முதல்வரின் இந்த பேச்சு அரசியல் நாகரீகத்தையும் தாண்டி, ஒருவித நிம்மதி உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியது.. நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்த துவங்கியது.. ஆனால், இப்போது கேள்விப்படும் விஷயம் அப்படி இல்லை.. அதே மோதல் போக்கை ஆளுநர் மீது திமுக தொடர்வதாக கூறப்படுகிறது..
புறக்கணிப்பு?
கவர்னர் ரவி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ஆளும் கட்சி புறக்கணிக்க முடிவு செய்து அறிவுறுத்தப்பட்டதாக நேற்று எழுதியுள்ளோம். அதேபோல, கவர்னர் நிகழ்ச்சியை புறக்கணித்து வருகிறார்கள் அமைச்சர்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர் ரவி.
பொன்முடி
பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், மாவட்ட அமைச்சர் என்ற முறையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் கலந்துகொள்வதாக இருந்தது. விழாவுக்கு அவர்களின் வருகையை கவர்னரும் பல்கலைக்கழக நிர்வாகமும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இரண்டு அமைச்சர்களும் கவர்னர் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டனர். சட்டப்பேரவை நடப்பதால் அமைச்சர்கள் வரவில்லை என தகவல் தரப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி
ஆனால், கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவர்களது புறக்கணிப்புக்கு உண்மை காரணம் என்கிறது திமுக தரப்பு. நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக்கேயன் கலந்துகொண்டார். கலந்துகொள்ளச் சொல்லி அரசு தரப்பில் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை தீவுத்திடலில் நடந்த சீனிவாச திருக்கல்யாணம் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொள்வதாக இருந்தது.
Recommended Video
சேகர்பாபு
கவர்னர் கலந்துகொள்வதால் கடைசி நேரத்தில் சேகர்பாபு இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் திமுகவினர். அதேசமயம், "ஆளும் கட்சிக்கும் கவர்னருக்குமிடையே நீடிக்கும் இந்த உரசல்கள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். இல்லையேல் மாநில வளர்ச்சிக்கு பாதகமாகும்" என்று திமுக தரப்பில் இப்படிப்பட்ட குரலும் எதிரொலிக்கவே செய்கிறது.. இந்த உரசலும் களையப்படுமா? முதல்வர் இது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பாரா? தெரியவில்லை.. பார்ப்போம்...!