"ஒரே நாடு ஒரே தேர்தல்".. இந்த 2 விஷயம் அதில் இருக்கு கவனிச்சீங்களா.. அரசியல் விமர்சகர் சொல்வது என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து அரசியல் ஆலோசகர் கலை கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமானது மிகச்சிறந்த திட்டம் என்றும், இதனால் 2 விதமான சாதகங்கள் கிடைக்கும் என்றும் அரசியல் விமர்சகர் கலை தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகப் பதவி வகித்த போது எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சட்ட ஆணையம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தன.
புலி பசித்தாலும் புல்லை தின்னாது! இறங்கி போன எடப்பாடி.. ஏன்? செம ட்விஸ்ட்! அட அண்ணாமலை வேற இருக்காரே
சட்ட ஆணையம்
இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்குமாறு, 'அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்' எனக் குறிப்பிட்டு எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியிருந்தது சட்ட ஆணையம். அந்தக் கடிதத்தைக் காட்டி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வந்தனர்.. ஜனவரி 16ம் தேதிக்குள், அதாவது இன்றைய தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதிமுக தரப்பிலிருந்து தற்போது இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் ஆலோசகர் கலை, நமக்கு பிரத்யேகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
சட்ட கமிஷன்
அவர் நம்மிடம் சொன்ன கருத்துக்கள் இதுதான்: "பதில் கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருக்காங்க. தேர்தல் ஆணையமும், சட்ட கமிஷனும் ஏற்கனவே 14வது சட்டக்குழுவை ஏராளமான பேர்களிடம் கருத்துக்களை கேட்டிருந்தார்கள். அவர்கள் ஒரு டிராப்ட் ரிப்போர்ட்டிங் பப்ளிஷ் செய்திருந்தார்கள். அதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அந்த டிராப்ட் ரிப்போர்ட்டைதான், 15வது இப்போது இருக்கக்கூடிய சட்டக்குழு, திரும்பவும் எல்லாருக்கும் அதை அனுப்பியிருக்கிறார்கள். 3 மாதத்திற்குள் கருத்தை சொல்ல வேண்டும் என்றும் சொல்லி உள்ளார்கள்..
எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஆதரித்திருக்கிறது. தேர்தல் ஆணையமும் அதை ஆதரித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் கருத்துக்களை கேட்டிருக்கிறது. அதுக்கு பதிலளிக்கும்வகையில்தான், எடப்பாடி பழனிசாமி, ஒருநாடு ஒரு தேர்தலை அதிமுக ஆதரிப்பதாக சொல்லி இருக்கிறார். இது சரியா? தவறு என்பது போல், இருபக்கமும் கருத்துக்கள் உள்ளன. நான்கூட அது சரிப்பட்டு வராதுன்னுதான் நினைச்சேன். ஆனால் 14வது சட்டகமிஷன் டிராப்ட் ரிப்போர்ட்டை பார்த்தபிறகு, அது சரிப்பட்டு வரும் என்றுதான் எனக்கு தெரியுது.
டிராப்ட் ரிப்போர்ட்
இதில் 2 விஷயங்கள் இருக்கின்றன.. ஒருநாள் ஒரு தேர்தல் முறையில், செலவுகளை குறைக்க முடியும்.. எப்பவுமே நாட்டின் ஒரு பகுதியில், தேர்தல் மூடிலேயே சிலர் இருப்பாரகள். அதை தவிர்க்க முடியும். எப்போது பார்த்தாலும் நாட்டில் ஏதாவது ஒரு தேர்தல் நடந்துட்டே இருக்கிறது.. தேர்தல் மூடு இருந்துட்டே இருக்குது. இடைத்தேர்தல்கள், 6 மாசத்துக்கு ஒருமுறை குரூப் பண்ணி நடத்தறாங்க. இப்படி 7, 8 மாநிலங்களில் நடக்கின்றன.. அடிக்கடி தேர்தல் நடத்துவதால், செலவினங்கள் அதிகமாகுது. 2024 நாடாளுமன்ற தேர்தல் வந்தால், அதில் தமிழ்நாடு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, அதோடு இணைப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், டிராப்ட் ரிப்போர்ட் பார்க்கும்போது அப்படியில்லை.
ஆணையம்
இதெல்லாம் ஒரே நாளில் செய்யக்கூடிய விஷயம் கிடையாது. முதல்கட்டமாக, 5 மாநில தேர்தல் வரப்போகிறதென்றால், அந்த தேர்தலை நாடாளுமன்ற தேர்தலை இணைக்க முயற்சி செய்யலாம். இப்படி ஒவ்வொன்றாக இணைத்து செயல்படலாம். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நீக்கப்பட்டு அங்கே வரும் எண்ணம் இல்லை. உதாரணமாக, ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து, ஆட்சி கலைக்கப்பட நேர்ந்தால், என்ன முடிவெடுக்கப்படும்? அந்த டிராப்ட் ரிப்போர்ட்டில், தேர்தல் ஆணையம் என்ன செய்யணும்னு சொல்கிறார்கள் என்றால், அந்த நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூப்பிட்டு, ஒருமித்த ஆட்சி முடியுமா என்கிறதை ஆராய வேண்டும்.
சாத்தியம்
சாத்தியம் இருந்தால் அதை செய்ய வேண்டும். சாத்தியம் அமையாவிட்டால் தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும். அந்த தேர்தலை அடுத்துவரக்கூடிய ஏதாவது ஒரு தேர்தலுடன் இணைத்து நடத்த முடியுமா? என்று பார்க்க வேண்டும். அதுக்கும் வாய்ப்புஇல்லை என்றால் தனியாக நடத்திதான் ஆக வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் முடிந்து, திடீரென சட்டமன்றம் கலைந்துவிடுகிறது என்று வைத்து கொள்வோம். அடுத்த தேர்தலை, தடுக்க முயற்சி செய்வார்கள். மீறி நடந்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அரசுக்கு, அதுக்கான காலகட்டம் என்பது 2 ஆண்டுகள்தான். ஏனென்றால், 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பவும் நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும்.
ஈரோடு கிழக்கு
இப்போது ஒரு இடைத்தேர்தல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி யாராவது இறந்துவிட்டால், அங்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்கிறார்கள். எந்த கட்சியின் உறுப்பினர் இறந்துவிட்டாரோ, அந்த கட்சி இன்னொரு எம்பி, எம்எல்ஏவை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அவர்களுக்கே அந்த பொறுப்பை தந்துவிட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில், 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் வரப்போகிறது என்று அறிவித்துள்ளார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஏற்றுக்கொள்வதானால், இடைத்தேர்தல் தேவையேயில்லை. காங்கிரஸ் கட்சியே தங்களில் ஒருவரை எம்எல்ஏவாக தேர்வு செய்துவிடலாம்.
மாநில சுயாட்சி
இப்படி தேர்ந்தெடுக்கப்படுவது மக்களாட்சி தத்துவத்திற்கு மாற்றாக பார்க்கப்படாது. காரணம், பிரதானமாக ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதில்லை.. அந்த கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் இதற்குதானே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதால், திரும்ப அந்த கட்சியிலேயே ஒருவரை தேர்வு செய்வதால் பிரச்சனை இல்லை. மாநில சுயாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. தேர்தலையே நடத்தாமல் தள்ளிப் போடுகிறார்கள் அல்லது மத்திய அரசே தேர்தலை தீர்மானிக்கிறது என்றால், அதை மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று கூறலாம். ஆனால், தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் தான். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இதில் சிறிய மாற்றமே தவிர, மாநில சுயாட்சிக்கு எதிரானது இது கிடையாது என்றார்.