ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அல்லது நினைவு நாள்! ஆம்ஸ்ட்ராங்கிற்கு தேதி குறித்த தம்பி! பகீர் தகவல்
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்றோ நினைவு நாளன்றோ கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழித்தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நள்ளிரவில் இருந்து அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் கைகளில் அரிவாள் கத்தியுடன் ஓடிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்ற பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னிருந்து செயல்பட்டது ஆம்ஸ்ட்ராங் என ஆற்காடு சுரேஷின் சகோதரரும் அவருடைய ஆதரவாளர்களும் கருதி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆற்காடு சுரேஷின் சகோதரர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 8 பேர் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணமடைந்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் அவர்கள் கூறுகையில் ஆற்காடு சுரேஷை கொன்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதியோ அல்லது அவருடைய பிறந்தநாளான ஜூலை 5 ஆம் தேதியோ ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டிருந்தோம்.
அதன்படி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளிலேயே எங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிட்டோம். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் ரத்த கறை படிந்த அரிவாளை ஆற்காடு சுரேஷின் படத்தின் முன்பு வைத்து பொன்னையன் உள்ளிட்டோர் பூஜை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தனது அண்ணனை கொன்றது இல்லாமல் தனது அப்பா, பெரியப்பாவை ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாகவும் அதனால் அஞ்சி தனது மனைவி தன்னை விட்டு பிரிந்துவிட்டதால் தற்போது ஆதரவின்றி தவித்து வருவதாகவும் இதற்காகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு தெரிவித்தாராம்.
மேலும் இந்த கொலைக்காக ஏற்கெனவே சிறையில் இருந்த போதே சில கூலிப்படையினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களை வைத்து காரியத்தை சாதித்ததாக பொன்னை பாலு தெரிவித்துள்ளார். இவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் ஆற்காடு சுரேஷின் நினைவு தினத்திற்குள் கொன்றுவிட திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் நேற்று எப்படியாவது ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என அவரை தொடர்ந்து இரு தினங்களாக கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications