ஜெ. மரணத்துக்கு சசிகலாவை காரணம் என்பதா.. சதி பண்ணிட்டாங்க.. ஆதரவாக வந்த ஜாதி அமைப்பு!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சசிகலாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று எண்ணி இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு இருக்கிறது என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பசும்பொன் கூறியுள்ளது.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் வழங்கிய அறிக்கை நேற்று தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சில அறிவுரைகளை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறது. இதில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாலர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம்
குறிப்பாக பல குற்றச்சாட்டுகள் சசிகலாவை குறிவைத்தே இருக்கின்றன. சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை எனவும், சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா
இந்நிலையில் சசிகலாவை வேண்டுமென்றே சிக்க வைத்திருப்பதாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பசும்பொன் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை வெளியிடப்பட்டது. இதை பார்வர்ட் பிளாக் திட்டவட்டமாக மறுக்கிறது. ஒரு தமிழ் மூத்த குடிகளை ஒழித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை அது நடந்து கொண்டிருக்கிறது.

திமுக
தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று எண்ணி அன்றைய காங்கிரஸ் அரசு தேவர் மீது பொய்யான ஒரு கொலை வழக்கை சுமத்தியது. அதேபோல் இன்று அம்மையார் சசிகலா அவர்களையும் அரசியல் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று எண்ணி இன்றைக்கு ஆட்சியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகம் திட்டமிட்டு இருக்கிறது. இது ஆறுமுகசாமி ஆணையத்தின் தீர்ப்பு அல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசாமிகளின் தீர்ப்பாக இருக்கிறது.

அரசியல் பின்னணி
முழுக்க முழுக்க இந்த ஆணையத்தின் தீர்ப்பில் அரசியல் பின்னிப் பிணைந்து இருக்கிறது. திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் திமுகவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும் அவர் எப்படி இறந்தார் என்று இதை மீறி திணிக்க முற்பட்டால் அம்மையார் சசிகலா அவர்களிடம் ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது என்று அறிந்தேன். அதை நேரம் வரும்போது அவரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் மீது எந்த குற்றமில்லை. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இதை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பசும்பொன் கட்சி வன்மையாக கண்டிக்கிறது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications