கப் இல்லைனா என்ன.. உலகத்திற்கு தெரியும் யார் சாம்பியன்னு! தெறிக்கவிட்ட சூர்யகுமார் யாதவ்
சென்னை: இந்திய அணி நேற்று நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும், பாக். அமைச்சர் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்தியா சம்மதிக்கவில்லை. இதனால் கோப்பையை நக்வி உடன் எடுத்துச் சென்றுவிட்டார். இருப்பினும், இந்தச் சம்பவத்தால் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
துபாயில் நடந்த பரபரப்பான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு ஒரு அசாதாரணச் சூழல் ஏற்பட்டது. அதாவது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் உள் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

சர்ச்சை
இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கையில் இருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர். நேற்று போட்டிக்குப் பிறகு நடக்கவிருந்த விழாவில் ஆசியக் கோப்பை மற்றும் வெற்றிப் பதக்கங்களை நக்வி வழங்கத் தயாராக இருந்தார். இருப்பினும், இந்திய அணி அவற்றைப் பெற மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த நக்வி கோப்பை மற்றும் பதக்கங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
கப் இல்லைனா என்ன
இதையடுத்து சூர்யகுமார் தலைமையிலான வீரர்கள் எந்தவிதக் கோப்பையும் கையில் இல்லாமல் மேடையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசியக் கோப்பையை நக்வி தனது ஹோட்டல் அறைக்கு எடுத்துச் சென்றதாக பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்தார். இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்ட போதிலும், அது இந்திய வீரர்களின் கொண்டாட்டத்தைப் பாதிக்கவில்லை.
இந்திய வீரர்கள் வழக்கம் போலக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த வெற்றி கொண்டாட்ட போட்டோக்களை பகிர்ந்தனர். அதேநேரம் கோப்பைக்குப் பதிலாக டிராபி போல இருக்கும் எமோஜி போட்டோவை சேர்த்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சூர்யகுமார், ஹர்திக், மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் "கோப்பை" எமோஜியுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.
சூர்யகுமார் யாதவ் நறுக்
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது ஒரு பதிவில், "போட்டி முடிந்த பிறகு, சாம்பியன்கள் மட்டுமே நினைவுகூரப்படுவார்கள், டிராபி படம் இல்லை என யாரும் யோசிக்க மாட்டார்கள்" என்று அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துகளை நெட்டிசன்கள் பலரும் ஆமோதிப்பதையும் பார்க்க முடிகிறது. முன்னதாக பிரஸ் மீட்டிலும் கூட இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படாமல் மறுக்கப்படுவது சரியானது இல்லை என்பது போல சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியும் பார்த்தும் வருகிறேன். எனது வாழ்க்கையில் இதுபோல ஒன்றைப் பார்த்ததில்லை. ஒரு சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டது. இது எளிதாகக் கிடைத்த வெற்றி அல்ல. நாங்கள் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடினமான போட்டிகளில் விளையாடினோம். நாங்கள் இந்தக் கோப்பைக்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்று உணர்கிறேன். இதற்கு மேல் நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை" என்று சூர்யகுமார் கூறினார்.
என்ன நடந்தது
கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் காலித் அல் ஜரூனியிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்திய அணி ஆசிய கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்திருந்தது. காலித் அல் ஜரூனி கூட அங்கு மேடையிலேயே தான் இருந்தார். ஆனால், மொஹ்சின் நக்வி இந்தக் கோரிக்கையை நிராகரித்து, கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துச் செல்ல ஆசிய கவுன்சில் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications