போச்சு..ஏடிஎம்மில் இனி 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கட்டனும்! ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு
சென்னை: இந்திய அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டு வரும் நிலையில் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வங்கிகள் 3 முதல் 5 முறை கட்டணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனை வழங்கி வரும் நிலையில், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் எல்லாமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அந்த வகையில் இ-காமர்ஸ், டிஜிட்டல் பரிவர்த்தனை, யுபிஐ உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு, வங்கிகள் ஊக்குவித்து வருகிறது.

பணம் செலுத்த எடுக்க என இரண்டு விஷயங்களை தவிர மற்ற அனைத்தையும் டிஜிட்டல் மூலமே மேற்கொள்ளலாம். கடந்த காலங்களில் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று சில படிவங்களை பூர்த்தி செய்து பணம் அனுப்ப வேண்டும். இதற்கு மிகுந்த காலதாமதம் ஆகும். ஆனால் தற்போது நெட் பேங்கிங், யூபிஐ வசதிகள் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி விட முடியும்.
அதே நேரத்தில் யுபிஐ வந்துவிட்ட பிறகு பணம் புழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மத்திய அரசும் மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் சிலர் இன்னும் ஏடிஎம்களின் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு முறை வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுலபமாகவும் இருப்பதாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு கட்டுப்பாடு இருக்கும் வகையில் புதிய நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வர இருக்கிறது. தற்போது வங்கிகளில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம். பிற வங்கிகளில் அதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. மாதத்தில் ஐந்து முறை வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் இலவசமாகவும், பிற வங்கிகளில் மூன்று முறை கட்டணம் இன்றியும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சில வங்கிகள் 8 முறை வரை கட்டணமில்லா பணப்பரிவினை வழங்குகின்றன.
அதற்கு மேல் செல்லும்போது இருபது ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணத்தை தான் மத்திய நிதியமைச்சகம் உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 23 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பிற வங்கிகளில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 23 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனால் குறைந்த தொகையை அடிக்கடி எடுப்பவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். எனவே மொத்தமாக பணத்தை எடுக்க வேண்டிய நிலை இருக்கும் அல்லது தங்கள் வங்கி ஏடிஎம் எங்கு இருக்கிறதோ அங்கு நாடி செல்ல வேண்டும். அங்கும் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் என்றாலும், 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையின சிறிய சிறிய தொகையாக எடுத்து செலவு செய்பவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications