ஆம்னி பேருந்துகளை மறித்து தூக்கும் அதிகாரிகள்.. கலங்கும் உரிமையாளர்கள்! பழிவாங்கல் என புலம்பல்
சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விதிகளை மீறி இயக்கப்படும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், “அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தில் 105 பேருந்துகள் மட்டும் தமிழகத்தில் மறுபதிவு செய்யப்பட்டன. எஞ்சிய 800 பேருந்துகளின் சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தால் ஆண்டுக்கு ரூ.34.56 கோடி தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. எனவே, சட்டத்துக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை இனியும் அனுமதிக்க இயலாது.

மேலும், இவற்றின் உரிமையாளர்கள் மீதும் அவர்கள் எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச்சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராய்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு விதிகளுக்கு புறம்பாக தமிழகத்துக்குள் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படும்.
பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரம் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தால்,அதை ரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தமிழகத்துக்குள் முறையாக 1,535 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இடர்ப்பாடுகள் எழ வாய்ப்பு இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று விதிப்படி இயங்கும் பேருந்துகளுக்கு தடை இல்லை” என்று கூறியிருந்தது.
ஆனால் கெடு 18ம் தேதியுடன் முடிந்த நிலையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இதனை சிறைபிடிக்கும் பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே தமிழக அரசுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது அங்கிருந்து அனைத்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஆம்னி பேருந்துகள் இதற்கு மாறாக கோயம்பேட்டிலிருந்தே இயக்கின. அரசு பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் சென்றுவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகள் அடம்பிடித்தது போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு எரிச்சலை கிளப்பியது.
இதனையடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள், உத்தரவை மீறி இயக்கப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனடியாக உயர்நீதிமன்றத்தை நாடினர். அங்கு சென்று அரசு உத்தரவுக்கு ஸ்டே வாங்கி வந்தனர். இது தமிழக அரசுக்கு கவுரவ பிரச்னையாக மாறியது.
இப்படி இருக்கையில்தான் தற்போது சுற்றி சுற்றி ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் தட்டி தூக்கி வருகின்றனர். இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில்,
“கிளாம்பாக்கம் விவகாரத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாடியதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது எங்கள் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இவர்கள் சொல்வதை போல வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் 900 கிடையாது, குறைவாதான் இருக்கிறது. இதனை தமிழக பதிவெண் கொண்ட வாகனமாக மாற்ற தமிழக அரசு உதவ வேண்டும். இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பல மடங்கு அதிக கட்டணங்களை வசூலிப்பது, விதிகளை மீறி பேருந்துகளை இயக்குவது, அரசு உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வது என ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications