முகச் சிதைவு நோய் பாதிப்பு.. சிறுமி உருக்கமான கோரிக்கை! உடனே உதவி கரம் நீட்டிய திருவள்ளூர் கலெக்டர்
ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் அருகே அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
மேலும் தன்னை யாரும் விளையாட்டுக்குக் கூட சேர்த்துக் கொள்வதில்லை என்றும் அந்த சிறுமி கூறும் போது மனம் பதைபதைக்கிறது. மேலும் ஆசிரியரும் தன்னை கடைசி வரிசையில் உட்கார வைத்தே பாடம் நடத்துவதாகவும் அந்த சிறுமி நா தழுதழுக்க கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் மூத்த மகள் டானியா. ஒன்பது வயதாகிறது . இவர் டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் மூன்று வயது வரை இயல்பாக வளர்ந்துள்ளார். மூன்றரை வயதிற்கு பின்னர் குழந்தை டேனியாவின் முகத்தில் தோன்றிய கரும்புள்ளியால் வாழ்க்கை முழுவதுமாக தலைகீழாக மாறி உள்ளது.
கல்வி தொலைக்காட்சி சிஇஓ விவகாரம்! அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை..ஓபனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
சாதாரண ரத்தக்கட்டு
இதை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அந்த பாதிப்பானது குறைந்தபாடில்லை. இதனால் டானியாவின் பெற்றோரான ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா தம்பதியினர் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்து மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.
முகச் சிதைவு
இவை எல்லாவற்றையும் செய்தும் மகள் டானியாவிற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நாட்கள் போக போக டானியாவின் முகம் வலது கண், கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைய தொடங்கியுள்ளது. இதனால் குழந்தையின் முகம் மிகவும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக டானியா படிக்கும் பள்ளியில் சக மாணவர்களே அவரை வெறுத்து ஒதுக்கும் வேதனையான சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
குறைபாடுகளால் தனிமை
மேலும் டானியா உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களோ ஒரு படி மேலே சென்று டானியாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய டானியாவின் தாய் சௌபாக்கியா கூறுகையில், எல்லா குழந்தைகளும் போலும் என் குழந்தையும் இயல்பாக இருந்தது.
3 வயது வரை நன்றாக இருந்த டானியா
மூன்று வயதிற்கு மேல் சிறிதாக தோன்றிய கரும்புள்ளியை கண்டு அதனை குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் அவருடைய மாணவி ஒருவர் கரூரில் தோல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் செல்லுங்கள் எனக் கூறி முகவரி கொடுத்தார். மேலும் தனியார் தோல் மருத்துவர் கிருத்திகாவை சந்தித்து மருத்துவம் பார்த்துக் கொள்ள அறிவுரை வழங்கினர்.
முகமே மாறிவிட்டது
இதனை ஏற்று டானியாவை கரூர் மருத்துவர் கிருத்திகாவிடம் அழைத்துச் சென்று சுமார் ஓர் ஆண்டாக சிகிச்சை பெற்றோம். மருத்துவர் கிருத்திகா பரிந்துரைத்த மருந்தை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக குழந்தையின் முகத்தில் தடவி வந்தோம். நாளடைவில் முகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட துவங்கி சதைகள் சுருங்கி கருகிப் போனதால் அந்த மருந்து தடவுவதை தவிர்த்தோம். இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வாய் மூக்கு தாடை என அனைத்தையும் பரிசோதித்து அனைத்து விதமான ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தையின் தொடையிலிருந்து சதைகளை எடுத்து முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி நாள் குறித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு டானியா தயாரான நிலையில் திடீரென ஸ்டான்லி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன டானியா பெற்றோர் இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் முக கவசம் அணிந்து கொள்ளும்படி அறிவுறுத்தியும் அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் குணமாகுமா என தெரியாது எனக் கூறியதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து வருவதாக தெரிவித்தார் டானியாவின் தாய்.
உணவு அருந்த மறுக்கிறார்கள்
இதுகுறித்து டானியா கூறுகையில், பள்ளியில் மாணவர்கள் தன்னுடன் அமர மறுக்கின்றனர். உணவு அருந்த விளையாட கூட வருவதில்லை. பள்ளியில் தனியாகவே இருப்பதால் எனக்கு பள்ளிக்கு செல்லவும் விருப்பமில்லை. வகுப்பு ஆசிரியரும் என்னை வேறு விதமாகவே நடத்துகிறார். கடைசி பெஞ்சில் உட்காரத்தான் எனக்கு அனுமதி அளிக்கிறார்கள்.
கண்ணீர் மல்க கூறிய பெற்றோர்
சுதந்திர தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் கூட என்னை கலந்து கொள்ள விடாமல் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். இதனால் எனக்கு படிப்பே வேண்டாம், முழுவதுமாக குணமடைந்தவுடன் பள்ளிக்கு செல்ல விரும்புகிறேன். முதல்வர் ஐயா எனக்கு முகத்தை சரி செய்து தாங்க என டானியா கேட்டுள்ளது கேட்போரை கலங்க வைக்கிறது. டானியாவுக்காக இதுவரை அவரது பெற்றோர் ரூ 40 லட்சம் வரை செலவு செய்துவிட்டனர். தனது முகத்தையும் படிப்பையும் எண்ணி நள்ளிரவில் டானியா அழுது வருவதாக டானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கலெக்டர் உதவி
இந்த தகவலை ஊடக செய்திகள் மூலம் அறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் தனது குழு சிறுமியை சந்தித்ததாகவும், தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கலெக்டரின் துரித நடவடிக்கையை சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினரும், நன்றி தெரிவித்தனர்.