பொதுத்தேர்வு சமயங்களில் கோயில் திருவிழாக்களா..? பரபர மனு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி "ஆர்டர்"
பொதுத்தேர்வு நடைபெறும் சமயங்களில் கோயில் திருவிழாக்களை தள்ளி வைக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை: பொதுத் தேர்வு சமயங்களில் கோயில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ப்ளஸ் 2 மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வு என்பதால், இதில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். மேலும், இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருப்பதும் முக்கியம். திருமண மண்டபங்களில் அதிக சத்தத்தில் பாடல்களை போடுவது, வழிபாட்டு தலங்களில் பக்தி பாடல்களை இசைப்பது போன்றவை அந்த சமயங்களில் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருநது திசைதிருப்பும்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டம் ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், முனியப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பொதுத்தேர்வு நடைபெறும் சமயங்களில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்க வேண்டும். தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்" என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கோயில் திருவிழாக்களின் போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கோயில் திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2019-ம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன" என்றார்.
விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும் எனக் கூறிய நீதிபதி, பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications