தயாநிதிமாறனின் வங்கி கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ 99,999 திரும்ப கிடைத்தது! ஆக்ஸிஸ் வங்கி விளக்கம்
சென்னை: திமுக எம்பி தயாநிதி மாறன் வங்கிக்கணக்கில் இருந்து திருடப்பட்ட ரூ.99,999 பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்ஸிஸ் வங்கி விளக்கமளித்துள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரம் போர்ட் கிளப் பகுதியில் வசித்து வரும் தயாநிதி மாறன் எம்பி நேற்று முன் தினம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திமுக எம்பியாக உள்ளேன். நானும் என் மனைவி பிரியாவும் சேர்ந்து ஜாயின்ட் அக்கவுன்ட்டை கோபாலபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் சேமிப்புக் கணக்காக வைத்துள்ளோம்.
கடந்த 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசியாவிலிருக்கும் என் மனைவிக்கு, தெரியாத செல்போன் எண்களில் இருந்து 3 தடவை போன் வந்துள்ளது. அதில் ஹிந்தி மொழியில் பேசியவர்கள் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ 99,999 பண பரிவர்த்தனை உங்களால் செய்யப்பட்டதா என்றும் கேட்டுள்ளனர்.
எனது மனைவி எந்தவித ஓடிபி நம்பரையும் கொடுக்காத நிலையில் எங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 99,999 ஒரே தடவையாக எடுக்கப்பட்டுவிட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. எனவே சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர் தன்னுடையதான் என்றும் தனது மனைவியின் செல்போன் எண் இல்லை என்றும் புகாரில் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவுக்கு புகாரை அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தயாநிதிமாறன் மனைவிக்கு வந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்து வந்தனர். ஓடிபி எண் இல்லாமலேயே எப்படி பணம் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்ற அதிர்ச்சி எழுந்தது. மேலும் இந்த திருட்டு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தயாநிதி மாறன் புகாராக கொடுத்திருந்தார். டிஜிட்டல் இந்தியாவில் தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என தயாநிதி மாறன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய பணம் திரும்ப கிடைத்துவிட்டதாக ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது. தயாநிதி மாறனின் வங்கிக் கணக்கிலிருந்து திருடப்பட்ட ரூ 99,999 பணம் மீண்டும் கிடைத்துவிட்டது என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications