மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் தலை தூக்க முடியாது.. பாடகி இசைவாணி மீது நடவடிக்கை உறுதி: சேகர்பாபு
சென்னை: ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடிய பாடகி இசைவாணிக்கு எதிராக பக்தர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அதுபற்றிய கேள்விக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழு உள்ளது. இந்த இசைக்குழுவில் பாடகியும், பிக்பாஸ் போட்டியாளருமான இசைவாணி உள்ளார். இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

அதாவது ‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்ற பாடலை பாடியிருந்தார்.
ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. அதனை மீறி உள்ளே வந்தால் என்ன நடக்கும்? எங்களை அடக்கி வைக்க இது பழைய காலம் இல்லை. ஏனென்றால் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் பேத்தி என்ற வகையில் அந்த பாடல் பொருள் தருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போலீசார் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே தான் இசைவாணிக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகை கஸ்தூரி கைதில் ஆர்வம் காட்டிய போலீசார் இசைவாணி விவகாரத்தில் அமைதி காக்கிறது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் ஐயப்பன் பற்றி பாடகி இசைவாணி படித்த பாடல் சர்ச்சையாகி இருப்பது பற்றி அமைச்சர் சேகர்பாபுவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சேகர்பாபு கூறியதாவது: இந்த ஆட்சியை பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்று முதல்வர் ஆட்சி செய்கிறார். ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரை இழிவுப்படுத்துவதை நிச்சயம் முதல்வர் அனுமதிக்கமாட்டார்கள்.
இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டம் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைத்தூக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’’ என்றார்.












Click it and Unblock the Notifications