தேர்தல் பஞ்சாயத்து... வாய்ப்பு மறுப்பு.. கமீலா நாசரை கட்சியிலிருந்து கமல் நீக்கியதன் பின்னணி..!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் கமீலா நாசர்.
Recommended Video
கமல்ஹாசனுடன் குடும்ப ரீதியாக 30 ஆண்டுகால நட்பு கொண்ட கமீலா நாசர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
இதனிடையே இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கமீலா நாசருக்கும் கமலுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சீட் கேட்டிருக்கிறார் கமீலா நாசர். ஆனால் அங்கு கவிஞர் சினேகனை வேட்பாளராக நிறுத்தினார் கமல்ஹாசன்.
அப்போதே மனம் வெறுத்துப்போன கமீலா நாசர், அதற்கு பிறகு தேர்தல் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல் பிரச்சாரத்துக்கு சினேகன் அழைப்பு விடுத்தும் அவர் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆதார் ஜெராக்ஸில் எழுதி தந்த கொரோனா ரிப்போர்ட்.. சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு.. தாய் மரணம்!
மேலும், கமீலா நாசர் விருகம்பாக்கம் தொகுதியில் வசித்தும் கூட அந்த தொகுதி வேட்பாளராகிய தனக்கு எந்த தேர்தல் பணியும் அவர் ஆற்றவில்லை என சினேகன் தரப்பிலும் கமலிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சென்னை மண்டல பொறுப்பாளராக இருந்த கமீலா நாசர், சென்னையில் கமல்ஹாசன் மேற்கொண்ட பிரச்சார நிகழ்ச்சிகளிலும் ஆப்செண்ட் ஆகியிருந்தார். தேர்தல் முடியும் வரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பாத கமல் தரப்பு, அண்மையில் கமீலா நாசரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது.
அப்போது தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக கமீலா நாசரிடம் இருந்து பதில் வந்திருக்கிறது. இருப்பினும் ஒரு வாரம் பொறுமை காக்கப்பட்ட சூழலில், இன்று காலை அதிரடியாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கமீலா நாசர் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் மேற்கொண்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள கமீலா நாசரை, 2006 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதி ஒன்றில் அதிமுக வேட்பாளராக களமிறக்க ஜெயலலிதாவே ஆர்வம் காட்டியது தனிக்கதை.