ஒரு ரூபாய் கூட இல்லை! சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே! கர்நாடக பகுதிக்கு சுங்க கட்டணம் இல்லையே ஏன்?
சென்னை: தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ் வே சாலைப் பணிகள் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதனை தொடர்ந்து கர்நாடக பகுதி சாலை திறக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. அந்த ரூட்டில் எங்கிருந்து எது வரை செல்ல முடியும். அதற்குச் சுங்கக் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே திட்டத்தின் கட்டுமானம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. இது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடக வழியாகச் செல்வது போலத் திட்டமிடப்பட்டு இருந்தது.

இதில் தமிழ்நாடு பகுதியில் நடந்த கட்டுமானம் சில காரணங்களால் தாமதம் ஆனது. இதனால் சாலை போடும் பணிகள் முழுமையாக முடியவில்லை. இதனால் சாலை முழுமையாகத் திறக்கப்படுவது தாமதம் ஆகி வருகிறது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே
அதேநேரம் பெங்களூர்- சென்னை விரைவு சாலையின் கர்நாடகா பகுதியில் கட்டுமானம் முடிந்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் மட்டும் சாலை போக்குவரத்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் திறக்கப்பட்டுள்ளது. இப்போது தினசரி 1,600 முதல் 2,000 வாகனங்கள் வரை அந்த சாலையை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஹோஸ்கோட் முதல் பெத்தமங்கலா வரை செல்வோர் இந்த சாலையில் தான் பயணிக்கிறார்கள்.
பொதுவாக எஸ்கிரஸ் வே சாலையில் டூவீலர் மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி இருக்காது. ஆனால், இந்த சாலை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவில்லை என்பதால் அனைத்து வகையான வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறதாம். அதேநேரம் இங்கு அனைத்து தரப்பு வாகனங்களும் பாதுகாப்பாகச் சென்று திரும்பத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு விளக்குகள், டிராபிக் கோடுகள் என அனைத்தும் பக்காவாக போட்டுள்ளனர்.
சுங்க கட்டணம் இல்லை
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போது இந்த சாலையில் எவ்வளவு டோல் வசூலிக்கப்படுகிறது? இப்போது ஒரு ரூபாய் கூட சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லையாம். இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி அமைக்கக் கோரிக்கை விடுத்த போதிலும், இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது சுங்க கட்டணம் வசூல் இன்னும் தொடங்கப்படவில்லை. அதேநேரம் அனுமதி வந்தவுடன் சுங்க கட்டண வசூல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், "தற்போது வாகன ஓட்டிகள் ஹோஸ்கோட்டிலிருந்து பெத்தமங்கலா வரை பயணிக்க இந்த சாலையைத் தான் பயன்படுத்துகின்றனர். தேவையான அனைத்து சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் செய்துள்ளோம். அதேநேரம் சுங்க கட்டண வசூல் ஆரம்பிக்கவில்லை. மேலும், இதனால் எந்தவொரு வாகன வகையையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது" என்றார்.
எதுவரை பயணிக்கலாம்
இந்த 68 கிமீ சுங்க கட்டணம் இல்லாத சாலையின் மூலம் வாகன ஓட்டிகள் பெத்தமங்களா வரை வந்துவிடலாம். பிறகு அங்கிருந்து வெளியேறி உள்ளூர் சாலைகளை மூலம் முல்பாகல் மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையை எளிதாக அடையலாம். கர்நாடகாவில் இந்த 3 கிமீ எக்ஸ்பிரஸ் வே ரூட்டில் மட்டும் சாலை அணைக்கும் பணிகள் முழுமையாக முடியவில்லை. அதுவும், இந்தாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே
பெங்களூர் முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் வரை 260 கிமீ நீளத்திற்கு இந்த விரைவு சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்தால் வாகனங்களால் அதிகபட்சம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.. மேலும், கர்நாடகாவில் இந்த எக்ஸ்பிரஸ் வேயில் இரண்டு சுங்கச்சாவடிகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அதாவது சாலைப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு சுங்கச்சாவடிகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மற்ற எக்ஸ்பிரஸ் வேக்களை போலவே இதிலும் பைக்குகள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் அனுமதி இருக்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications