இந்த சூழலில் நீலாம்பரி பார்முலாவை கடைப்பிடியுங்க மக்களே.. ஸ்டே சேஃப்!.. பீ ஹேப்பி!!
சென்னை: கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் படையப்பா படத்தில் வரும் நீலாம்பரியை போல் வீட்டுக்குள்ளே அடைஞ்சி இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா என்ற ஒரு வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வருகின்றன. அந்தந்த நாடுகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதில் பொதுவாக சொல்லப்படுவது கைகளை சோப்பு போட்டு கழுவுவது. தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது, பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். இருமும்போதும் தும்மும் போதும் வாயை கைக்குட்டையால் மூடிவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு வலியுறுத்தி வருகிறது.
எச்சரிக்கை
ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் அரசு உத்தரவாகவே போடப்பட்டுள்ளது. அதாவது பணி,உணவு, மருந்து, மருத்துவம் ஆகியவற்றுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து விடுகின்றனர்.
அறிகுறி
வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களிடம் சற்று ஒதுங்கியே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே வேளையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டு வந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படியும் கொரோனா கிருமி 28 நாட்கள் வரை மனித உடலில் தங்கி அறிகுறியை காட்டும் என ஆய்வுகள் கூறுகிறது.
காரணம்
இதனால் கொரோனா பாதித்த நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் சென்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அது போல் வெளியே சென்றால் யாருக்கு பாதிப்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பது அவர்களுக்கே தெரியாத காரணத்தால் பொதுமக்களும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
நீலாம்பரி
சுருக்கமாக சொல்வதானால் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போல் நாம் இருக்க வேண்டும். இந்த படத்தில் ரஜினியை திருமணம் செய்து கொள்ள முடியாத கோபத்தில் 20 ஆண்டுகளாக இருட்டு அறையில் யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பார். அது போல் இருக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் உலா வருகிறது. அதில் நீலாம்பரி சூழ்நிலையை புரிந்து கொண்டார். தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மக்களிடமிருந்து விலகியே இருந்தார். எனவே நீலாம்பரியாக மாறுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லா வருவீங்க
அடப்பாவிங்களா உங்களின் அழிச்சாட்டியத்திற்கு ஒரு அளவே இல்லையா எதனுடன் எதை கம்பேர் செய்வது? எப்போதும் விளையாட்டு பிள்ளைகளாகவே இருக்கீங்களேப்பா? இந்த நித்யானந்தா என்னவென்றால் தான் ஸ்ரீகைலாசா நாட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட போது சிரித்தீர்களே இப்போது சமூக தனிமைப்படுத்துதலை உலக நாடுகளே ஊக்குவிக்கிறார்கள் என தனது ட்விட்டரில் போட்டிருந்தார். சினிமாவில் ரஜினியை கல்யாணம் செய்யமுடியாமல் தவித்த நீலாம்பரி தன்னை சிறைப்படுத்திக் கொண்டதை கொரோனாவுடன் தொடர்புபடுத்துகிறீர்களே நீங்களெல்லாம் நல்லா வருவீங்கப்பா!