"லாஸ்லியா.. என்னை விட அவர் நல்லவர்.. ஜென்டில்மேன்".. கமல் வாயால் பாராட்டப்பட்ட அன்புள்ள "அப்பா"!
கமல்ஹாசனால் பாராட்டை பெற்றவர் மரியநேசன்
சென்னை: "உன் அப்பா என்னை விட நல்லவர் லாஸ்லியா.. ஜென்டில்மேன்" என்று கமல் வாயால் பாராட்டு பெற்றவர்தான் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வருட சீசனில் கலந்து கொண்டவர் லாஸ்லியா... இலங்கையை சேர்ந்த இளம்பெண்.
அழகான தோற்றம், துறுதுறு செயல்பாடு, கொஞ்சும் இலங்கை தமிழ் போன்றவற்றால் ரசிகர்கள் மத்தியில் மிக குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனவர்.
காதல்
இவருக்கு திடீரென கவினுடன் காதல் ஏற்படவும், அப்போதிருந்துதான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜிகுஜிகுவென பற்றிக் கொண்டு வைரலானது.. அதுவரை பார்க்காத ரசிகர்கள்கூட கவின் - லாஸ்லியாவுக்காக பார்க்க ஆரம்பித்தனர்.. எதுவா இருந்தாலும் எங்க வீட்டில் பேசிக்கலாம்.. கண்டிப்பாக நம்ம லவ்வுக்கு ஒத்து கொள்வார்கள்" என்று கவினுக்கு தைரியம் சொல்லி வந்தார் லாஸ்லியா. இதனால், லாஸ்லியா அப்பா இந்த காதலை எப்படி எடுத்து கொள்வாரோ? கவினை ஏற்று கொள்வாரோ என்ற எதிர்பார்ப்பு மொத்த பேருக்கும் தொற்றிக் கொண்டது.
சேரன் சாயல்
அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தார் அப்பா மரியநேசன்.. லாஸ்லியா சொன்னதுபோலவே, பார்ப்பதற்கு சேரன் போலவே இருந்தார்.. அன்றைய நிகழ்ச்சிதான் சோஷியல் மீடியாவில் இன்றளவும் ஹிட் அடித்து கொண்டு வருகிறது... வீட்டிற்குள் நுழைந்ததும் லாஸ்லியாவை கோபத்தில் திட்டியதும், கண்டித்ததும், பிறகு வாரி முத்தமிட்டதும், கவினை மன்னித்து இயல்பாக பேசியதும் என ஒரே நாளில் ஹீரோவானார் மரியநேசன். பார்த்தவர்கள் எல்லோருக்குமே இந்த பாச மழை கண்ணீரை வரவழைத்துவிட்டது.
வேதனை
கமலுக்கும் மரியநேசனை மிகவும் பிடித்துவிட்டது.. "என்னைவிட ரொம்ப நல்லவர் நீங்கள்.. ஜென்டில்மேன்" என்று ஒருமுறை இல்லை, பலமுறை மேடையில் பாராட்டி கொண்டே இருந்தார் கமல்.. பெண்ணை பெற்றவர்கள் எப்படி இக்கட்டான ஒரு விஷயத்தை, உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்பதற்கு உதாரணமாக மரியநேசன் இருப்பதாக கூறினார்.. தானும் 2 பெண் பிள்ளைகள் பெற்றதால், அந்த வலியும் வேதனையும் தன்னால் உணர முடியும் என்பதையும் அடிக்கடி பதிவு செய்தார்.
இரங்கல்
இப்படிப்பட்ட சூழலில்தான் மரியநேசனின் அதிர்ச்சி செய்தி நமக்கு வந்துள்ளது.. இதுகுறித்து சேரனும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.. சேரன் மட்டுமல்ல, லாஸ்லியாவின் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது... ட்விட்டரில் பிக்பாஸ் வீட்டில் மரியநேசன் உள்ளே வந்த வீடியோக்களையும், அவரது போட்டோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.. எங்கோ பிறந்து வளர்ந்த மரியநேசனை, இன்று நம் தமிழக மக்களும் நேசிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அவரது ஒரே ஒருநாள் செயல்பாடுகள்தான்.
மரியநேசன்
எல்லை மீறி கட்டுக்கடங்காமல் தறிகெட்டு சென்று கொண்டிருக்கும் பிரச்சனை என்றாலும், அதை பக்குவத்துடனும், பொறுமையுடனும், நிதானத்துடனும் எப்படி கையாள வேண்டும், எல்லா சூழலிலும் ஒரு நபருக்கு இது தேவை என்பதைதான் மரியநேசன் உணர்த்தி உள்ளார்.. இறப்புக்கு பின்னரும் ஒருவர் இப்படி பேசப்படுகிறார் என்றால், அவருடைய குணம் என்பதைதவிர அதற்கு வேறு காரணம் என்ன இருக்க முடியும்!?