சொன்ன சொல்லை காப்பாற்றும் பாஜக.. நிதிஷ் குமார்தான் பீகார் முதல்வர்.. உறுதியாக அறிவித்த சுஷில் மோடி!
பாட்னா: பீகார் தேர்தலில் வென்றுள்ள பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார் என்று பாஜக கட்சி அறிவித்துள்ளது.
பீகார் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 125 இடங்களில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைக்கிறது
இந்த தேர்தலில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிரடியாக வென்றுள்ளது . 110 இடங்களில் காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வென்றுள்ளது.
அதிக இடம்
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும்.. கூட்டணிக்குள் பாஜகதான் அதிக இடங்களை வென்று இருந்தது. இந்த கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களில் வென்றது. இதனால் குறைந்த இடங்களில் வென்ற நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுக்குமா என்று கேள்வி எழுந்தது.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல் பாஜக பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், நிதிஷ் குமார்தான் முதல்வராக நீடிப்பார் என்று பாஜக உறுதி செய்துள்ளது. முதல்வரை மாற்றும் எண்ணம் இல்லை, நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
சுஷில் மோடி
சுஷில் மோடி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெற மோடி மற்றும் நிதிஷ் குமார்தான் காரணம். எங்களுக்கு கிளியர் மெஜாரிட்டியை மக்கள் வழங்கி உள்ளனர். எதிர்க்கட்சிகள் தேவையில்லாத வதந்திகளை கிளப்பினார்கள்... ஆனால் மக்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என்று நிரூபணம் ஆகியுள்ளது.
முதல்வர் யார் ?
நிதிஷ் குமார்தான் இந்த முறையும் முதல்வராக இருப்பார். ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமாக இருக்கும். கூட்டணிக்குள் யார் வேண்டுமானாலும் அதிக இடங்களை பெறலாம். ஆனால் கூட்டணியின் வெற்றிக்கு நிதிஷ் குமார் முக்கிய காரணமாக இருந்தார். கொரோனா, வெள்ளம், வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை நிதிஷ் குமார் நேர்த்தியாக கையாண்டார். இதனால்தான் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மக்கள் ஆதரவு
ஆட்சிக்கு ஆதரவாக அலை நிலவி வருகிறது. அதனால் எங்களுக்கு வாக்கு விழுந்துள்ளது. தொலைநோக்கு பார்வை கொண்டவர் நிதிஷ் குமார். அவர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக நீடிப்பார், என்று சுஷில் மோடி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே நிதிஷ் குமார்தான் முதல்வராவார் என்று பாஜக தலைவர்கள் அறிவித்த நிலையில்.. தற்போது சொன்னபடி முதல்வர் பதவியை நிதிஷுக்கு பாஜக வழங்கி உள்ளது.