பாஜக ஆட்சிக்கு வந்தால்.. பெரியார் சிலைக்கு என்னவாகும்?.. யாருக்கு சிலை வைப்போம்.. பாஜக அண்ணாமலை
சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலையின் கதி என்ன தெரியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
சென்னை மதுரவாயிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன் சிலை எதற்கு? அதை அகற்ற வேண்டும் என தெரிவித்தார.
கனல் கண்ணனுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் இருந்தன. கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரியார் சிலை மீது கை வைத்து பாருங்கள் என திராவிடர் கழகத்தினரும் பெரியார் அமைப்புகளும் மல்லுக்கட்டின.

பாஜக விவசாய அணி
இந்த நிலையில் பாஜக விவசாய அணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என கூறி சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

மின்சார பயன்பாடு
மின்சார பயன்பாடு குறித்து அளவீடு கணக்கெடுக்கப்படும். யாரும் யாருடன் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ரஜினி ஆளுநரை சந்தித்ததை சிலர் அரசியலாக்குகிறார்கள். ஆவின் பால் விலையை தமிழக அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஆவின் விலை உயர்வு காரணமாகதான் தனியார் பால் நிறுவனங்களும் விலையேற்றத்தை தந்துள்ளன.

ஆவின் விலை
எனவே ஆவின் விலை உயர்வை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தவேண்டும். மது விலக்கு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக்கால் நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். பெரியாரை பொருத்தமட்டில் சில விஷயங்களில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது.

கடவுள்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கடவுளை பற்றி பேசியது, ஒரு சமுதாயத்தை தாக்கி பேசியதிலிருந்து எனக்கு அவருக்கு மாறுபாடு உண்டு. இந்தியாவில் சமூக சீர்திருத்தத்திற்காக பெரியார் உள்ளிட்ட பலர் பாடுபட்டனர். ஆனால் பெரியாரை மட்டும் கொண்டாடிவிட்டு மற்றவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

ஆட்சிக்கு வந்தால்
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிப்போம். அவர்களுக்கு சிலை வைப்போம். யாருடைய சிலையை எங்கே வைப்பது என்பதை முடிவு செய்வோம். பெரியாரின் சிலைக்கு பாஜகவால் எந்த பாதிப்பும் வராது. அவர் இந்த சமூகத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications