அண்ணாமலையுடன் மோதலை விடுங்க! திமுக நினைத்திருந்தால்.. ஆனால் அப்படி செய்யவில்லை.. பாஜக உமா ஆனந்தன்
சென்னை: சென்னை கவுன்சிலராகி 10 மாதங்கள் ஆன நிலையில் தற்போது தனது செயல்பாடுகளும் மேயர் ஆர் பிரியாவின் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பது குறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. 200 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது.
அது 134 ஆவது வார்டு. அந்த வார்டில் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் வென்றார். இவர் 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சென்னையில் பாஜக வென்ற ஒரே ஒரு வார்டு இதுவாகும்.

21 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த வெற்றியின் மூலம் 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாஜக மீண்டும் கால் பதித்தது. இந்த வெற்றி பாஜகவால் கொண்டாடப்படக் கூடிய வெற்றி என்றாலும் கோட்சே ஆதரவாளர், பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என சர்ச்சைக்குரிய வகையில் தனது பிரச்சாரத்தில் பல்வேறு கருத்துகளை உமா ஆனந்தன் தெரிவித்திருந்தார்.

உமா ஆனந்தன்
இந்த நிலையில் கவுன்சிலர் உமா ஆனந்தன் அப்பகுதிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆங்கில நாளிதழிற்கு பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், 0 மாதங்களாக வார்டு கவுன்சிலராக நான் பணியாற்றியது திருப்தியாகவே இருக்கிறது. திமுக கவுன்சிலர்கள் தனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

திமுக
திமுகவினர் எனக்கு எதிராக செயல்படவில்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி ரீதியாக செயல்படுகிறார். ஆனால் நான் கவுன்சிலராக செயல்பட்டு வருகிறேன். எனது கட்சியை விமர்சித்தால் நான் உரிய பதிலடி தருவேன். சென்னை மேயர் பிரியா, பழகுவதற்கு இனிமையானவர். இளமையான மேயர். மூத்தவர்களிடம் நிறைய விஷயங்களை கற்று கொள்ள விரும்புகிறார்.

பெண் கவுன்சிலர்கள்
பெண் கவுன்சிலர்கள் நிறைய பேரை அவர்களது வீட்டு ஆண்கள்தான் கட்டுப்படுத்துவதாக சொல்கிறார்கள். இதுகுறித்து மேயர் பிரியாவும் ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் என்னை பொருத்தமட்டில் எனது கணவர் தற்போது உயிருடன் இல்லை. எனது மகளும் அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதனால் நான் எனது பணிகளை நானே 100 சதவீதம் நிறைவுடன் செய்கிறேன். அது மட்டுமல்லாமல் மக்களிடம் அவ்வப்போது குறைகளை கேட்டு வருகிறேன். என்னால் தீர்க்க முடிந்த குறைகளை நானே தீர்த்துவிடுகிறேன். மற்றவைகளை மாமன்றத்தில் வைக்கிறேன். இவ்வாறு உமா ஆனந்தன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications