பழைய கணக்கு ஆகாது.. எடப்பாடிக்கு கட்டம் கட்டும் அமித் ஷா.. 2 பேரையும் உள்ளே கொண்டு வர பாஜக டார்கெட்!
சென்னை : கடந்த தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி போடும் கணக்குகள் எல்லாம் இந்த முறை அமித் ஷாவிடம் செல்லாது, அதற்கு ஏற்றபடி எடப்பாடிக்கு கட்டம் கட்ட டெல்லி தயாராகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில தேர்தல்களாக அதிமுக மீது தான் பாஜக சவாரி செய்து வருகிறது. அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்ற நிலையே இருக்கிறது. ஆனாலும், சீட் பேரத்தில் அதிமுக நிச்சயம் கறார் காட்டும் எனக் கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும் என்ற முடிவிலும் ஈபிஎஸ் முரண்டு பிடிப்பார் என்கிறார்கள்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 சீட்கள் கொடுக்கப்பட்டன. அதில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணியே தேனி தொகுதியைத் தவிர 38 இடங்களில் வாஷ் அவுட் ஆனது. இதற்கு பாஜகவிற்கு எதிரான சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எதிரணிக்கு சென்றதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வராது என்பதை உணர்ந்தே அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்னி பரீட்சையில் இறங்கியது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள் இருந்தன. இப்போதும் அதே கணக்குகள் இருக்கும் என்றாலும், இந்த முறை ஒற்றைத் தலைமையாக தனது பலத்தை நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை கிடைக்கும் கேப்பில் எல்லாம் விமர்சித்து வந்த பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து வந்த பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகி களமிறங்கினால் அது திமுகவுக்கே சாதகமாக அமையும் என்று அமித் ஷா அண்ணாமலையிடம் கூறியதாகத் தெரிகிறது. அதனால், அதிமுகவுடன் சமரசமாகச் செல்ல அண்ணாமலை முடிவெடுத்து விட்டாராம்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதேசமயம் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் இல்லாத அதிமுக என்பது பலம் குறைந்த அதிமுக என்றே பாஜக கருதுகிறதாம். எனவே கட்சிக்குள் அவர்களை கொண்டு வர முடியாது என்றாலும் கூட்டணிக்குள் அழைத்து வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் பலமாகவே இருக்கிறோம். தினகரன் தேவையில்லை, நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதை இனியும் அமித் ஷா தரப்பு நம்பத் தயாராக இல்லையாம். தினகரன் தனித்து நின்றதால் 20+ தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததை கண்கூடாக டெல்லி பார்த்திருப்பதால் அதில் அமித் ஷா கறாராக இருக்கிறாராம்.
தேர்தல் நெருங்க நெருங்க, தினகரன் + ஓபிஎஸ் இருவரையும், கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை டெல்லி பாஜக தலைமை தொடங்கும் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் அதிமுக பாஜக கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணிகளும் இடம்பெறுவதை டெல்லி உறுதி செய்யும் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications