பிரதமரை சந்திக்க எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க! அண்ணாமலையை சுற்றி சுற்றி வரும் பாஜக நிர்வாகிகள்!
சென்னை: நாளை மறுநாள் சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜகவில் பலரும் அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Recommended Video
ஒருவர் இருவர் இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தால் பரவாயில்லை, நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பிரதமரை சந்திக்க வேண்டும் என ஆவல் தெரிவித்திருப்பதால் அண்ணாமலை தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித் தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பிரதமர் வருகை
நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர் அன்றிரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதனிடையே வியாழக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை முக்கியஸ்தர்களை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியுள்ளார் பிரதமர் மோடி.

பாஜகவினர் ஆர்வம்
பிரதமர் மோடியை இதுவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காத பாஜக நிர்வாகிகள் பலரும் இந்த முறை பிரதமரை தாங்கள் எப்படியும் சந்திக்க வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக தங்களுக்கு பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். யாரை விடுவது யாரை அழைத்துச் செல்வது எனத் தெரியாமல் அண்ணாமலை தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.

அதிமுக பஞ்சாயத்து
இதற்கு மத்தியில் அதிமுக பஞ்சாயத்து வேறு உள்ளது. அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பிரதமரை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருந்த நிலையில் நேரம் கொடுக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் மீதான இமேஜ் சரிந்தது. இந்நிலையில் நாளை மறுதினம் சென்னை வரும் பிரதமர் மோடியிடம் எப்படியும் நேரம் வாங்கி சந்தித்து விட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் தரப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு சற்றும் சளைக்காமல் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். அரை மணி நேரம் முக்கியஸ்தர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் -க்கு தலா 5 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications