தனித்து போனது தப்பா போச்சோ..? திமுக, அதிமுகவுக்கு தாவும் முக்கிய “தலைகள்”, என்ன செய்யப் போகுது பாஜக?
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பாஜகவிலிருந்து அடுத்தடுத்து அக்கட்சியினர் திமுக மற்றும் அதிமுகவுக்கு தாவி வரும் நிலையில் அடுத்து என்ன செய்யப்போகிறார் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.
ஃபோகசை திருப்பிய இபிஎஸ்-ஓபிஎஸ்.. உதயநிதிக்கு சுற்றி சுற்றி கேட் போட்ட அதிமுக! ப்ரமோஷன் தரும் திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகம் இதுவரை சந்தித்திராத வகையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக, பாமக, மநீம, நாம் தமிழர், அமமுக, எஸ்டிபிஐ, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளோடு, ஊரக உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்ற விஜய் மக்கள் இயக்கம் ஆகியவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் உள்ளனர். இது மட்டுமல்லாது தங்கள் வார்டுகளில் அதிக செல்வாக்குள்ள பலரும் கட்சிகளில் சீட்டு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கி பலம் பொருந்திய அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.
உடைந்த கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனி கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தமாக ( மூப்பனார்) உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. மேயர் பதவி மற்றும் கேட்ட இடங்கள் கிடைக்காததால் பாஜக, கூட்டணியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியேறியது. இதன் காரணமாக தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதனையடுத்து அக்கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் அண்ணாமலை.
மல்லு கட்டும் பாஜக
அதிமுக சார்பில் தற்போது பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆச்சர்யம் அளிக்கும் வகையில் அதில் பல பாஜக பிரமுகர்களின் பெயரும், அவர்களது மனைவி உள்ளிட்ட உறவினர்களின் பெயரும் இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகரம் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், அதிமுக - திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வருவது பாஜக தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் கணிசமான இடங்களை பெற முயற்சி செய்து வரும் நிலையில், கட்சி தாவல் காரணமாக சற்றே சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கட்சி தாவும் நிர்வாகிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவரான முரளி அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதேபோல கோவையில் பாஜகவினர் 20க்கும் மேற்பட்டோர் வேட்பாளர் முன்னிலையிலேயே திமுகவில் இணைந்தனர். திண்டுக்கல் மாநகர பாஜக தலைவரான கே.பி.ரமேஷ் என்பவர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார். தனித்து களம் கண்டு குறிப்பிட்ட இடங்களை பெறுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை முழங்கி வரும் நிலையில், பாஜக முக்கிய நிர்வாகி கட்சி தாவினால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலில் தோல்வியைத் தழுவினால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் எனக் கருதி தற்போது திமுக அதிமுகவில் இணைந்து விடலாம் என மேலும் பல நிர்வாகிகள் சிந்தனையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.