என்னது தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கிறதா? பாஜக பிரமுகரின் சர்ச்சை ட்வீட்
சென்னை: தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கப் போவதாக தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ட்விட்டரில் பொய்யான செய்தியை அமர்பிரசாத் ரெட்டி பரப்புவதால் போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நெட்டிசன்கள் புகார் கூறியுள்ளனர்.
1980களில் பண்டிட்டுகள் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகளாக பிற மாநிலங்களில் தஞ்சமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகள் குடியேற்றம் தொடர்பாக விவாதிக்கப்பட்டும் வருகிறது.

காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். கடந்த 11-ந் தேதி இந்தி மொழியில் இத்திரைப்படம் வெளியானது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பாஜகவின் குரலாக வெளியாகி இருக்கிறது. இதனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன.பிரதமர் மோடியும் இத்திரைப்படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நாளை சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீ்ன்ஸில் இத்திரைப்படத்தை திரையிடப் போவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத் துறை பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தமது ட்விட்டர் பதிவில் தமிழக அரசு தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தடை செய்யப் போவதாக செய்திகள் உலா வருகிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும் அப்படி தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு தடை விதித்தால் சகித்துக் கொண்டிருக்கமாட்டோம்; ஒவ்வொரு தமிழனும் இத்திரைப்படத்தை பார்ப்பதை நாம் உறுதி செய்வோம் என அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டியின் இப்பதிவுக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில், பொய்ச்செய்தி பரப்புவதால் அமர் பிரசாத் ரெட்டியை தமிழக போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications