திமுகவினர் நடத்தும் மது ஆலைகள்! வாய் திறக்காதது ஏன்? ரஜினியை சீண்டியவருக்கு காயத்ரி பதிலடி!
சென்னை: தேவை இல்லாமல் ரஜினிகாந்தை சீண்டாதீர்கள் என சமூக ஆர்வலர் ஜி சுந்தரராஜனுக்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூகவிரோதிகள்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை தூத்துக்குடிக்கே சென்று பார்வையிட்ட ரஜினிகாந்த் பலியானோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது சமூகவிரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர் என்றார்.

விவசாயிகள் போராட்டம்
அப்போது சமூகவிரோதிகள் என்றால் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவர்களை ஒருமையில் பேசியிருந்தார் ரஜினி. மேலும் எதற்கெடுத்தாலும் போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என ஆவேசமாக ரஜினி கூறியிருந்தார். இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராடி வந்தனர்.

போராட்ட களம்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்ட களத்திலிருந்து நகர மாட்டோம் என்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதால் அறிவித்தார். இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அகிம்சை வழியில் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடினால் என்றும் வெற்றி நிச்சயம் என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

விவசாயிகள்
மனஉறுதியாக இருந்து சாதித்த விவசாயிகளுக்கும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய அரசுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி சுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் போராடினால் என்ன கிடைக்கும், போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று சொன்ன அறிவுஜிவிகளே, இதோ ஓராண்டாக விவசாயிகள் போராடியதன் விளைவாக இந்திய பிரதமர் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். வேறு என்ன வேண்டும், போராடினால் வாழ்க்கை கிடைக்கும் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

காயத்ரி எச்சரிக்கை
இது மறைமுகமாக அவர் ரஜினியை சாடியிருந்தது தெரிகிறது. இதை கண்டித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டாரை மறைமுகமாக விமர்சிக்கும் இந்த போராளிகள் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளால் சுற்றுப்புற சூழலும் நிலத்தடி நீரும் மாசுபடுவதை பற்றி பேசாமல் இருப்பது ஏன் மீத்தேனுக்கு யார் கையெழுத்து போட்டது என்பதை விவாதிக்காதது ஏன் நீங்கள் யாருடைய கைகூலிகளாக செயல்படுகிறிர்கள் என்று உலகிற்கு தெரியும் தேவை இல்லாமல் சூப்பர் ஸ்டாரை சீண்டாதீர்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications