இந்தியா என்ற அதிசயம் இப்போது ஆபத்தில் உள்ளது.. பாஜகவுக்கு கொள்கை என எதுவும் இல்லை! விளாசும் பிடிஆர்
சென்னை: இந்தியாவின் வளர்ச்சி, பாஜகவின் திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து மத்திய பாஜக அரசின் கொள்கைகளை மிகக் கடுமையாகச் சாடி வருகிறார். கடந்த வாரம் கூட இலவசங்கள் தொடர்பான அவரது பேட்டி டிரெண்டிங்கில் இருந்தது.
இந்தச் சூழலில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்கு அமைச்சர் பிடிஆர் அளித்திருந்த விரிவான பேட்டியில் அவர் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசி இருந்தார்.
லியோனி, பிடிஆர்..புண்படுத்திட்டே இருங்காங்க! கொந்தளித்த பாஜக சீனியர்! இவ்வளவு கடன் வாங்கியிருக்காரா?
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அந்த பேட்டியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "அன்று அண்ணா தனிநாடு கேட்ட காரணத்தைப் புரிந்துகொள்ளத் திராவிட இயக்கத்தின் வேர் கொள்கைக்குச் செல்ல வேண்டும். சுயமரியாதையே திராவிட இயக்கத்தின் ஆணிவேர். சாதிய அடக்குமுறைகளை உடைத்தெறிவதே சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் சமமான உரிமை இருக்கிறது. இவர்தான் இந்த வேலை செய்ய வேண்டும் என எதுவும் இருக்கக் கூடாது. சுயமரியாதையில் இருந்து தொடங்க வேண்டும். அப்போது தான் தான் சுயமாகச் சிந்தித்து முடிவு எடுப்பது, கல்வி, பகுத்தறிவு என எல்லாம் வந்துவிடும். சுயமரியாதையில் இருந்தே சுயாட்சி வருகிறது. பல ஆயிரம் நூற்றாண்டுகளாகப் பல அரசர்களைக் கண்ட இந்த நிலம் இந்தியா என்ற நாடாக உருவாக்கப்படுகிறது.
அண்ணா
அப்போது ஒரு சில பேலென்ஸ் தேவைப்படுகிறது. குறிப்பாகச் சீனப் போருக்குப் பின்னால், அதன் காரணமாகவே அண்ணா சீனப் போருக்குப் பின் தனி நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். இப்போதும் கூட மாநில சுயாட்சி, அதிகாரத்தைக் குவிப்பது, அது டெல்லியாக இருந்தாலும் சரி லண்டான இருந்தாலும் சரி, அதற்கு எதிரான எண்ணம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது. அன்று இருந்த பேச்சுரிமை கூட இன்று இல்லை என்பதே நிஜம். நாம் எந்த சுதந்திரத்திற்கா போராடினோம். அதில் பேச்சுரிமையும் ஒரு பகுதியாகவே உள்ளது. ஆனால், இப்போது குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக எதாவது கூறினாலே அவர்களை அர்பன் நக்சல் என முத்திரையிடும் பழக்கம் உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல!
பேச்சுரிமை
அன்று இருந்ததை விட நாடு இப்போது பலமாக உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ராணுவம், அரசியலமைப்பு தெளிவாக உள்ளது. இந்த சமயம் பேச்சுரிமைக்குக் கூடுதல் உரிமை தந்திருக்க வேண்டும். மாறாக அரசுக்கு எதிராகக் கருத்து கூறினாலே தேசத் துரோகி என முத்திரையிடும் பணியே தொடர்கிறது. உலகில் இருக்கும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது. இந்தியாவில் தான் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி உள்ளூர் அமைப்புகளுக்கே அதிக அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்காவில் மாகாணங்களுக்கும், நகராட்சிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதிகார குவியல்
ஆனால், இந்தியாவில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் கொடுக்கும் அரசியலமைப்பு உள்ளது. அதிலும் அவசர நிலை சமயத்தில் மாநில பட்டியலில் இருக்கும் சில விஷயங்களும் கூட ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இந்த அதிகார குவியலுக்கு எதிராகவே எங்களைப் போன்ற மாநிலங்கள் குரல் கொடுத்து வருகிறது. அண்ணாவின் குரலும் இது தான். கூட்டாட்சி முன்னிறுத்தும் அரசியலமைப்பு நமக்கு இருந்திருக்க வேண்டும்.
நரேந்திர மோடி
கடந்த 25 ஆண்டுகளில் மாநில சுயாட்சிக்கும், மத்திய அரசின் அதிகார குவியலுக்கு எதிராகவும் அதிகம் குரல் கொடுத்தவர் மோடி. குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில் இதை அவர் செய்தார். மாநில சுயாட்சி தொடர்பாக நான் பொது மேடைகளில் சொல்லும் அனைத்தும் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது சொன்னது தான். இது தமிழர்களுக்கோ திராவிடர்களுக்கோ தனித்துவமானது இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. பிரதமர் மோடி கூறுவது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் உள்ளது. கூட்டாட்சியைக் குறித்துப் பேசுபவர் அதிகார குவியலை நோக்கியே நடவடிக்கை எடுக்கிறார்.
இந்தி திணிப்பு
1930, 1960 முயற்சிகளுக்குப் பின், நாடு முழுக்க இந்தியைத் திணிக்க 4ஆவது முறையாக முயல்கின்றனர். ஒவ்வொரு முறையும் மொழியைத் திணிக்க முயலும் போது எதிர்ப்புகள் கிளம்பும். குறிப்பாகச் சுயமரியாதை உள்ளவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும். நமது கலாச்சாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதில் மொழி தான் மையம். அப்படியிருக்கும்போது மொழியின் முக்கியத்துவத்தைச் சீர்குலைக்க முயன்றால் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பவே செய்யும். அண்ணா சொன்னது போல 2 மொழிக்கொள்கை இருந்தால் போதும். தாய் மொழி சொந்த மாநிலத்திற்கு உள்ளேயும், ஆங்கிலம் இந்திய மக்களிடையே மற்றும் உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு உதவும். இந்தி மாநிலங்களால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியாததால், அவர்கள் ஒற்றை மொழி கொள்கையாக இந்தியைப் பின்பற்றுவார்கள். ஆனால், தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் மட்டும் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்தியை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை.
பாஜகவுக்கு கொள்கை இல்லை
மாநில சுயாட்சியை அழிப்பதே பாஜகவின் நோக்கம். அவர்களால் மத்திய அரசையே முறையாக நடத்த முடிவதில்லை. பாஜகவுக்கே முரணான கொள்கைகள் உள்ளன. அவர்கள் உபி-இல் மாட்டுக்கறிக்கு எதிராகவும் கோவாவில் அதற்கு ஆதரவாகவும் உள்ளனர். பாஜகவுக்குத் தனியாகக் கொள்கை என எதுவும் இல்லை. அவர்களுக்கு அதிகாரத்தைப் பிடிப்பது மட்டுமே ஒரே நோக்கம். இந்த நாடு சீராக வளரவில்லை. சில மாநிலங்கள் நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியோ கொண்ட மாநிலங்கள் கூட முறையான சமூக நீதியைப் பின்பற்றவில்லை. குஜராத்தைக் காட்டிலும் தமிழக வளர்ச்சி சற்று குறைவாக இருந்தாலும் கூட பெண் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் தமிழகம் மிகச் சிறப்பாகவே உள்ளது.
இந்தியாவே அதிசயம் தான்
பல விதமான மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறையைக் கொண்டது இந்தியா என்று ஒருங்கிணைந்து இருப்பதே அதிசயம் தான். வரலாற்றில் உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு அதிசயம் இல்லை. ஆனால், இந்த அதிசயம் இப்போது பெரிய ஆபத்தில் உள்ளது. நாம் அனைவரும் நல்ல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன்.
நிச்சயம் மாறும்
நீங்கள் வரலாற்றைப் பார்த்தால், எந்தவொரு நபரும் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்தால், அழிவு நிச்சியம் வரும். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் மூலம் தேர்வாகி, ஜனநாயகத்தை அழித்தார்கள். ஆனால், அவர்களுக்கும் அழிவே வந்தது. எனவே, எதுவும் பெரிதாக நீட்டிக்காது. எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. மனிதர்களைத் தாண்டிய ஒரு சக்தி இருக்கிறது. அது இதையெல்லாம் பார்த்துக் கொள்ளும். இந்தியா சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி வரும். ஒட்டுமொத்த தேசத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கே முடிவு வந்ததை யாரும் மறந்துவிடக்கூடாது" என்றார்.