பொறியில் மாட்டிய பாஜக முக்கிய நிர்வாகி.. ரூ. 4 கோடி கைமாறியது எப்படி? தோண்டித் துருவும் போலீசார்!
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து இருந்து ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் தொழில் பிரிவு தலைவர் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகள், 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது. அவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதியில் பணியாற்றும் பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக திமுக, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. பாஜக வேட்பாளருக்காக பணம் எடுத்துச் சென்றதால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல ஆணையத்தை வலியுறுத்தின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து இருந்து ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் தொழில் துறை பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கு தாம்பரம் மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள கோவர்த்தனனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து இந்த 4 கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கோவர்த்தனன் விசாரணைக்கு அழைக்கப் பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
நெல்லை வேட்பாளருக்காக பணம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருப்பதால் அடுத்தடுத்து மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் அதிர்ச்சிகரமான திருப்பங்கள் நிகழலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications