“விஜய் இவங்க சகவாசத்தை கட் பண்ணனும்.. புதுசா நிர்வாகிகளை நியமிக்கணும்” - கஸ்தூரி அட்வைஸ்!
சென்னை: "தவெக தலைவர் விஜய் தற்போது உடன் உள்ளவர்களை விலக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்" என நடிகை கஸ்தூரி அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான கூட்டணி சரி வராது, ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றும் பாஜக பிரமுகர் கஸ்தூரி கூறியுள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு விஜய் குறித்த நேரத்தில் மக்களை சந்திக்க வராமல், கூட்டத்திற்கு தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டது.

அதேசமயம் பாஜக மற்றும் அதிமுக, மாநில அரசின் அலட்சியப் போக்குதான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என கூறியது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்து வருகிறது. முன்னதாக கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தவெக தலைவர் விஜய் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சில நாட்கள் தலைமறைவாகி இருந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தவெக நிர்வாகிகள் சந்திக்கவில்லை. விஜய் நேரில் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை. இதுதொடர்பாக விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் கஸ்தூரி.
கஸ்தூரி பேசுகையில், "நடிகர் விஜய் தலைமையிலான கூட்டணி தற்போது சூழ்நிலைக்கு சரிவராது. கரூர் சம்பவத்திற்கு பிறகு கரூர் மக்களே விஜய் பக்கம் இருக்கிறார்கள், ஆனால் அவர் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அவருடன் இல்லை. விஜய் சுய சிந்தனையுடன் செயல்பட்டு மக்களுக்கான தலைவனாக செயலாற்ற வேண்டும். விஜய் தற்போது உடன் உள்ளவர்களை விலக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். கூட இருக்கும் சகவாசங்களை கட் பண்ணனும்.
கரூரில் உயிரிழப்புகளை சந்தித்த குடும்பம் கூட விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைக்காக விஜய் ஏதாவது செய்ய வேண்டும். விஜய் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடக்கூடாது. சுயமாக முடிவெடுத்து மக்களுக்கான தலைவனாக வர வேண்டும். பேச்சுகளை எல்லாம் உடைத்து விட்டு நடிகர் விஜய், ஆந்திர மாநில துணை முதல்வர், நடிகருமான பவன் கல்யாணை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டின் மாற்றத்திற்கான தளபதியாக உருவாக வேண்டும்.
இப்போது இருக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு விஜய் உறுதுணையாக இருக்க வேண்டும். டிடிவி தினகரன் பாஜக உடன் தொடர்ந்து பல வருடங்களாக பயணித்தவர். பாஜகவுடன் அவருக்கு எந்த முறிவும் இல்லை. எடப்பாடி பழனிசாமி உடன் தான் அவருக்கு கருத்து வேறுபாடு. வேறுபாடுகளை முறியடித்து வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications