சந்தைக்கடை.. யுத்தத்தை எதிர்கொள்ள இது போதுமா? கேட்கும் கே.எஸ். அழகிரி.. ரொம்ப லேட்..குஷ்பு கிண்டல்
சென்னை: பொது தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் பிரதான கட்சிகள் போரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாதை யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எந்த நிலைமையில் இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். தேர்தல் யுத்தத்தை எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனை ட்வீட் செய்துள்ள பாஜகவின் குஷ்பு நீங்க ரொம்ப லேட் என்று கிண்டல் அடித்துள்ளார்.
சமீபத்தில் கட்சி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நாளைக்கு தேர்தல் வருகிறபோது நீங்கள் கொடியேற்றிய இடத்தில் யார் யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் எல்லாம் வாக்குச்சாவடி உறுப்பினர்கள். முதலில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அதில் உறுப்பினர்களாக போடுங்கள். உங்கள் சொந்தக்காரர்களை உறுப்பினர்களாக போடுங்கள், உங்கள் ஜாதிக்காரர்களை உறுப்பினராக போடுங்கள், உங்கள் நண்பர்களை உறுப்பினராக போடுங்கள், ஒரு பெரிய வாக்குச்சாவடி கமிட்டியே அங்கே வந்துவிடும். வராமல் எங்கு போய்விடும். ஒரு முறைக்கு இரண்டு முறை போய் கேட்டீர்கள் என்றால் வருவார்கள். படை பலத்தை உருவாக்குவது என்பது அப்படித்தான் என்று கூறியிருந்தார்.
ஒரு சிறந்த படை இருந்தால் தான் போரிட முடியும். 23ஆம் புலிகேசி படத்தில் வருவதை போன்று வாள் கிடையாது, கேடயம் கிடையாது, குதிரை கிடையாது, யானை கிடையாது. அப்படி இருந்தால் எப்படி யுத்தத்திற்கு போக முடியும். எனவே அதைச் செய்தால் தான் நாம் யுத்தத்திற்கு போகலாம் என்று கூறியிருந்தார் கே.எஸ். அழகிரி.

ராகுல்காந்தி
தோழர்களே இது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பு. ராகுல் காந்தி இல்லையென்றால் இந்த நம்பிக்கை வராது. ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவன் வேண்டும். எந்த கூட்டமும் தலைவன் இல்லாமல் செயல்படாது. ஒரு சிறந்த தலைமையை கொடுக்கக்கூடிய பண்பு ராகுல் காந்திக்கு இருக்கிறது என்று கூறிய கே.எஸ் அழகிரி பாஜகவின் பூத் ஏஜெண்டுகளை வெகுவாக பாராட்டினார்.

கட்டுப்பாடான அமைப்பு
யாரிடம் கட்டுப்பாடான அமைப்பு இருக்கிறதோ அந்த இயக்கம் தான் வெற்றி பெறும் என்ற நிலை வந்து விட்டது. பாஜகவின் வாக்குச்சாவடி ஏஜென்டுகளாக ஒவ்வொரு மாநிலத்திலும் 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பாஜக காரர்கள் கிடையாது..ஆர்எஸ்எஸ் காரர்கள்.. அவர்கள் ஒரு சைக்கிளில் வருகிறார்கள்... தயிர்சாதம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.. தேர்தல் நேரத்தில் பூத்தில் அமர்ந்து கடுமையாக தேர்தல் வேலை செய்கிறார்கள்.

கொள்கைக்காக பணி
அவர் அந்த பகுதியை சார்ந்தவராக இருக்கிறார். அவருக்கு நீங்கள் பிரியாணி பொட்டலமோ, 500 ரூபாய் பணமோ,மது பாட்டிலோ தர வேண்டாம்..கொள்கைக்காக அவர்கள் அங்கே வந்து அமர்ந்து இருக்கிறார்கள். அவரை எதிர்ப்பவர்கள் இதே போல வாக்குச்சாவடியில் அமர வேண்டும் அந்த படை நம்மிடம் வேண்டாமா? இதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

யுத்தத்தை எதிர்கொள்ள தேவை
நீங்கள் பேருக்கு சந்தைக்கடை போல ஒன்றை வைத்திருந்தால்..சத்திரம் போல நடத்தினால் யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது என்றும் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். அதை நீங்க நன்றாக புரிந்து கொள்ளுங்கள் என்றும் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் பூத் ஏஜெண்ட் கொள்கைக்காக வேலை செய்கிறார்கள். பணத்திற்காகவோ, பிரியாணி பொட்டலத்திற்காகவோ, மதுவிற்காகவோ வேலை செய்யவில்லை என்று பாஜகவினரை பாராட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

ரொம்ப லேட்
இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஒரு பாஜக நிர்வாகி. அதில் அவர் பாஜகவிற்கு இது முதல் வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலிலும் பாஜகவிற்கு வெற்றி உறுதி என்று குறிப்பிட்டுள்ளார். அதனை ரீ ட்வீட் செய்துள்ள குஷ்பு, அழகிரியை கிண்டலடித்து இது லேட் என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது கே.எஸ். அழகிரிக்கும் குஷ்புவிற்கு ஏற்பட்ட மோதலே அவர் அங்கிருந்து வெளியேறி பாஜகவில் இணைய காரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications