கிறிஸ்தவம்.. எங்களுக்கெல்லாம் குளுகுளுன்னுதான் இருக்கு.. உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக நாராயணன் பதிலடி
சென்னை : நானும் ஒரு கிறிஸ்தவன் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன், உதயநிதி கிறிஸ்தவன் என்று சொல்கிறார் என சிலருக்கு நிச்சயம் வயிறு எரியும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்த நிலையில், அதற்கு பதில் கொடுத்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "வயிறு எரியாது, குளிரவே செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்தான். அந்த உரிமையில், நானும் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றாலும், அவரது குடும்பத்தில் சிலர் தீவிர கடவுள் பக்தி கொண்டவர்கள். உதயநிதி ஸ்டாலினும் கடவுள் மறுப்பு எண்ணம் கொண்டவரே. இந்நிலையில், கிறிஸ்துமஸ் விழாவில் தன்னை கிறிஸ்தவன் என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மிஸ் சென்னை போட்டி மோசடி வழக்கை ரத்து செய்ய கோரி மீரா மிதுன் வழக்கு.. தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
அமைச்சர் உதயநிதி
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் திமுக சார்பில் 2000 பேருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, சிலருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்கிறேன். இந்து அறநிலையைத் துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு இப்போது இங்கு அல்லேலூயா என்று கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
சமூக நீதி ஆட்சி
அமைச்சர் சேகர்பாபு எப்போதுமே மாலையும் கழுத்துமாகத்தான் இருப்பார். ஆனால் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கு செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதற்கு பெயர்தான் சமூக நீதி கட்சி. இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகிய தலைவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். இந்த ஆட்சியை தான் இப்போதைய முதல்வரும் நடத்தி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் நானும் ஒரு கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் எனப் பேசினார்.
நானும் கிறிஸ்தவன் தான்
மேலும், சேகர்பாபு அல்லேலூயா சொல்கிறார். உதயநிதி கிறிஸ்தவர் என்று சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும். நான் படித்தது எழும்பூரில் இருக்கும் கிறிஸ்தவ பள்ளியில். லயோலா கல்லூரியில் தான் பிடித்தேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்தான். அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
எரியாது.. மனம் குளிரும்
இந்நிலையில் நான் கிறிஸ்தவன் என்று சொல்வதால் சிலருக்கு நிச்சயம் எரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதியின் பேச்சைக் குறிப்பிட்டுள்ள நாராயணன் திருப்பதி, "இல்லை. அனைவரின் மனமும் குளிரும். இப்படி ஒரு 'மதவாதி' ஹிந்துவாக இல்லையே என்பதில் மகிழ்ச்சியே" என்று தெரிவித்துள்ளார்.