"நீங்க பிரஸ்ஸா".. தெறித்து ஓடிய மோடி?.. அபுரோட்டில் கைகூப்பி.. ஆசிரியரை வணங்கி.. 2022-ன் மாஸ் வீடியோ
2022-ல் பிரதமர் மோடியின் 5 வீடியோக்கள் இணையத்தில் பிரதானமாக வைரலானது
சென்னை: பாஜகவை பொறுத்தவரை, பிரதமர் என்ற பதவியையும் தாண்டி, அசைக்க முடியாத சக்தியாக உருவாகி உள்ளார் மோடி.. அதனால்தான், பிரதமர் மோடி குறித்த எத்தனையோ செய்திகள் மீடியாவில் ஒவ்வொரு முறையும் ஆக்கிரமித்து விடுகின்றன.. இதில் இந்த வருடம் 2022-ல் நடந்த ஒரு சில நிகழ்வுகளையும், அதுகுறித்த வீடியோக்களையும் யாராலும் மறக்க முடியாது.
மற்ற கட்சிகளுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அக்கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரங்களும், வியூகங்களும்தான்.
பெரும்பாலான கட்சிகள் களத்தில் இறங்கி, மக்களை நெருங்கி, தங்கள் கட்சிகளை வளர்க்கிறது என்றால், பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாஜக கட்சியை வளர்ப்பதாக பரவலாகவே ஒரு விமர்சனம் உள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தில்.. சசிகலா கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர்.. அதிரடியாக உறுதிமொழி ஏற்பு!
டிஜிட்டல்
டிஜிட்டலில் அரசியலை கையில் எடுத்தாலும், அது பாஜகவுக்கு பிரதானமாக உதவுவதாகவே சொல்கிறார்கள்.. இது வடமாநிலங்களில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறதாம்.. அந்தவகையில், பாஜக குறித்த செய்திகளும், பாஜக சம்பந்தப்பட்ட வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் தனி கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.. இது சில சமயம் அக்கட்சிக்கு பலமாகவும், சில சமயம் மைனஸாகவும் அமைந்து வருகிறது.. அந்தவகையில், 2022-ல் ஒருசில வீடியோக்கள் மீடியாவில் ஆக்கிரமிப்பு செய்ததுடன், பொதுமக்கள் மத்தியிலும் அவை கூர்ந்து கவனிக்கப்பட்டன. அதில் ஒரு சில நிகழ்வுகள்தான் இவை:
பாலத்தில் மோடி
இந்த வருட துவக்கத்திலேயே அதாவது, ஜனவரி 5ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல நேர்ந்தது.. ஆனால், மோடியின் வாகனம், ஹுசைனிவாலாவை சென்றடைய 30 கிமீ தூரம் இருந்தபோது, வழியில் திடீரென போராட்டக்காரர்கள் குவிந்துவிட்டனர்..
வறுத்தெடுத்தனர்
இதனால் பதிண்டா என்ற பகுதியின் மேம்பாலத்தில் பிரதமரின் கான்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாதுகாப்பு குளறுபடி காரணமாக, அந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பிரதமர் ரத்து செய்ய நேர்ந்தது என்றாலும், இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் நட்டா வரை, பஞ்சாப் காங்கிரஸை வறுத்தெடுத்து விட்டனர்.. இது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஓ மை காட்
அதேபோல, பிரதமர் மோடி டென்மார்க் சென்றிருந்தபோது, அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர்... பிரதமர் மோடி காருக்கு செல்லும்போது அருகில் சென்ற இந்திய செய்தி நிறுவன செய்தியாளர்கள், "சார் எங்களை உள்ளே விடவில்லை" என்று டக்கென மைக்கை நீட்டி உள்ளனர்.. திடீரென செய்தியாளர்கள் வந்துவிட்ட நிலையில், இதை எதிர்பார்க்காத பிரதமர், "ஓ மை காட்.. நான் போய் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்க வேண்டுமா?" என்று சொல்லிவிட்டு பிரதமர் மோடி அங்கிருந்து நகர்ந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால், நடந்த சம்பவத்தை மறைத்து, திரித்து இவ்வாறு வெளியிட்டதாக பாஜகவினர் சொன்னார்கள்.
வெட்டி ஒட்டி
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு டிவி சேனலுக்கு நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, "இன்னைக்கு சோஷியல் மீடியா என்பது, களத்தை சமப்படுத்தும் புதிய சக்தியாக வந்துவிட்டது.. சோஷியல் மீடியாவில் ஒருவரின் குரலை மட்டும் அமுக்கி, இன்னொருவர் குரலை மட்டும், அதுவும் தேவையானதை மட்டும் வெளியே காட்டவே முடியாது.. இங்கே அமுக்கினால், அங்கே உப்புகிறது.. எத்தனையோ வெட்டுதல், ஒட்டுதல் இன்னைக்கும் நடக்குது.. நான் மோடிக்கு சொம்பு தூக்கவில்லை, நான் பாஜகவும் கிடையாது.. ஆனால், உண்மையை பொய்யாக மாற்றும் கலையை பார்த்து வியந்துவிட்டேன்..
நடிகை கஸ்தூரி
ஒருமுறை பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது, பத்திரிகையாளர்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.. "நான் உள்ளே பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் எல்லாரும் வெளியே காத்து கொண்டிருந்தீர்கள், ஓ மை காட்.. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே" என்று மோடி சொல்லியிருந்தார். ஆனால், இது வெளியே எப்படி திரிந்து வந்தது தெரியுமா? செய்தியாளர்களை பார்த்து, "நீங்க பிரஸ்ஸா? ஓ மை காட்" என்று பயந்து ஓடுற மாதிரி காட்டிவிட்டார்கள்.. இந்த வேலையை செய்வது யார் தெரியுமா? என்று கேள்வி கேட்டிருந்தார் கஸ்தூரி.. இந்த வீடியோவின் உண்மைதன்மை எது என தெரியாவிட்டாலும், அந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டுவிட்டது.
டீச்சர் மோடி
அதேபோல, சில நெகிழ்ச்சி சம்பவங்களும் பாஜக தரப்பில் வீடியோவாக வெளிவந்தது.. குஜராத் தேர்தலில் பிரச்சாரத்துக்கு முன்பாக, பிரதமர் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது, மோடி தன்னுடைய பள்ளி ஆசிரியரை சந்தித்து பேசினார்.. நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வதோதராவை சேர்ந்தவர்தான் மோடியின் முன்னாள் பள்ளி ஆசிரியர்.. அவர் பெயர் ஜக்தீஷ் பாய் நாயக்கர்.. அவர் குஜராத்தின் வாட்நகரில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்தார்... அப்போதுதான் மோடிக்கு பாடம் கற்று தந்துள்ளதாக தெரிகிறது.. முன்னாள் ஆசிரியரை நேரிலேயே சந்தித்து நலம் விசாரித்தார் மோடி.
சந்தோஷம்
இருவரும் ஒன்றாக சேர்த்து போட்டோ எடுத்துக் கொண்டனர். ஆசிரியரை இருகரம் கூப்பி பிரதமர் வரவேற்க, மோடியின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்ததுடன், அவரை கட்டிப்பிடிக்கவும் முயற்சிக்கிறார் ஆசிரியர்.. ஆசிரியர் - மாணவர் இருவரின் முகத்திலும் சந்தோஷம், பீறிட்டு நிரம்பி தளும்பி வழிந்து கொண்டிருந்த அந்த வீடியோவும் வைரலானது.. அதேபோல, இன்னொருமுறை குஜராத் காந்தி நகரில் இருந்து, ஆமதாபத்துக்கு பிரதமர் தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று அவசர அவசரமாக வந்தது..
ஆம்புலன்ஸ்
அந்த ஆம்புலன்ஸை பார்த்ததுமே, உடனடியாக தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார். கொஞ்ச நேத்தில், அந்த ஆம்புலன்ஸும் கடந்து சென்றுவிட்டது.. அதற்கு பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் ஒவ்வொன்றாக செல்ல ஆரம்பித்தன.. இது வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதே சமயத்தில் ராஜஸ்தானில் ஒரு சம்பவம் நடந்தது.. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக சிரோஹியின் அபு ரோடு பகுதியில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால், அங்கு பிரதமர் வந்து சேருவதற்கே லேட்டாகிவிட்டது..
வட்டி முதல்
இரவு 10 மணிக்கு மேல் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், மோடியால் அந்த பேரணியில் உரையாற்ற முடியவில்லை.. அதேசமயம், தனக்காக கால்கடுக்க காத்து கொண்டிருந்த பொதுமக்களிடம், "நான் வந்து சேர்வதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டது.. விதிமுறைகளை நான் பின்பற்ற வேண்டும் என்று என்னுடைய மனசாட்சி சொல்கிறது.. அதனால், உங்கள் முன்பு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. ஆனால் நான் மறுபடியும் இங்கே வருவேன்.. இதோ நீங்கள் எனக்கு தந்த இந்த அன்பையும், பாசத்தையும், மறுபடியம் வந்து வட்டியுடன் திருப்பித் தருவேன்" என்று மைக், ஸ்பீக்கர் இது எதுவுமே இல்லாமல் பேசினார் மோடி..
மைக் எங்கே
இந்த வீடியோவையும் பாஜகவினர் வைரலாக்கினர்.. அதுமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும் தன்னுடைய தாயை நேரில் காண பிரதமர் செல்லும்போதெல்லாம், பாசத்தை தாங்கி நிற்கும் அந்த வீடியோவும் வைரலாகும்.. அதேபோல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலும், பிரதமரின் டிரஸ்கள் உலக மக்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்துவிடும்.. பொதுவாக, அரசியல் கட்சிகள் என்றாலே, எத்தனையோ நிகழ்வுகள் நடக்கும் என்றாலும், பிரதமர் மோடியின் சில செயல்பாடுகள், இந்த வருடம் 2022-ல் பரபரப்பாக பேசப்பட்டதை மறக்கவோ, மறுக்க முடியாது...!!!