எச்.ராஜாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்.. லண்டனிலிருந்து அண்ணாமலை அட்வைஸ்! விஷயம் இதுதான்!
சென்னை: மேற்படிப்பு விஷயமாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றிருக்கிறார். இந்நிலையில், கட்சியை வழிநடத்த ஹெச்.ராஜா தலைமையில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு கமிட்டியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று, அண்ணாமலை வீடியோ வாயிலாக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் களமிறங்கி 4 இடங்களை பாஜக கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து கூட்டணியை உடைத்துக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருந்தது. இதில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. மோடி, அமித்ஷா என முக்கிய தலைகளை எல்லாம் களம் இறக்கியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது, தேசிய தலைமை மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போதாத குறைக்கு உட்கட்சி பூசல்கள் வேறு.

இந்த பஞ்சாயத்துக்கு நடுவில்தான், மேற்படிப்புக்காக லண்டன் பறந்திருக்கிறார் அண்ணாமலை. லண்டனிலிருந்து திருப்ப சில நாட்கள் வரை ஆகும் என்பதால், கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பு கமிட்டியை தேசிய தலைமை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி அமைப்பதாக பேச்சுக்கள் எழ தொடங்கியதிலிருந்தே பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. கட்சியின் முக்கிய தலைகள் இந்த கமிட்டியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்றனர்.
ஆனால், பலருக்கும் இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இறுதியில் எச். ராஜா தலைமையில் கணகாசபபதி, ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், கருப்பு முருகானந்தம் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டியாக இருப்பவர்களுக்கு இந்த குழுவில் இடமளிக்கப்படவில்லை என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இதில் இன்னொரு ட்விஸ்ட்டும் இருக்கிறது. அதாவது என்னதான் ஒருங்கிணைப்பு குழு அதிகாரம் பெற்றதாக இருந்தாலும், அக்குழு தன்னிச்சையாக செயல்பட முடியாது. இக்குழு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில மையத்தின் ஒப்புதல் அவசியம். இந்த மைய குழுவில் உள்ள தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டியினர் என்று சொல்லப்படுகிறது. ஆக இதுதான் இப்போதுள்ள சிக்கல்.
தற்போது பாஜக தேசிய அளவில் உறுப்பினர் பதிவை தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் கட்சி உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு உறுப்பினர் பதிவில் அவ்வளவு வேகம் எட்டப்படவில்லை. இன்னும் 10 லட்சம் பேர் கூட முழுமையாக இணையவில்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சி நடத்துவது? என்று தேசிய தலைமை பொங்கியிருக்கிறது. ஆக, உறுப்பினர் பதிவில் தீவிரம் காட்ட வேண்டி நிலையில் தமிழக பாஜக இருக்கிறது.
இதற்காக ஹெச் ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து செயல்படுங்கள் என்று அண்ணாமலை அவ்வப்போது கூறி வந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாகதான் இன்று வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவில் பேசிய அண்ணாமலை, நம்முடைய இலக்கு பெரியது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது அன்பு வைத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் நம்முடைய வளர்ச்சியை கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். இறுதியில் ஹெச். ராஜாவுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இந்த கடைசி பாயிண்ட்தான் முக்கியமானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications