பாதாளத்துக்கு சரியும் ‘அந்த’ கட்சியின் வாக்கு வங்கி..2031ல் திராவிடம் இல்லா தமிழகம்! அண்ணாமலை ஆரூடம்
சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு திராவிட கட்சியின் வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிந்து வருவதாகவும் அந்த கட்சியின் இடத்திற்கு வேறு கட்சி வரும் எனக் கூறியிருக்கிறார் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை. மேலும் 2031ஆம் ஆண்டு திராவிட கட்சிகளே இல்லாத ஒரு தமிழகம் உருவாகும் எனவும் கணித்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் ஆன அண்ணாமலை தற்போது லண்டன் சென்றிருக்கிறார், அங்கு உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மூன்று மாதம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அண்ணாமலை லண்டன் சென்ற நிலையில், அரசியல் படிப்போடு பல்வேறு நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை பயணத்தை முடித்துக் கொண்டு வரும் வரை தமிழக பாஜகவை வழிநடத்த தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது..
தொடர்ந்து அண்ணாமலை தனது மேற்படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார். அதற்கு பின்னர் முதன் முதலாக டிசம்பர் ஒன்றாம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிலையில் லண்டனில் இருந்தவாறு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில் 2031 ஆம் ஆண்டு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாடு உருவாகும் என தெரிவித்திருக்கிறார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள அண்ணாமலை, திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்டு வந்திருக்கின்றன. ஆனால் தற்போது தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி 40 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளார். தமிழகத்தில் 30 முதல் 35 சதவீதம் மட்டுமே வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் திராவிட சித்தாந்தமானது காலாவதியாகி வருகிறது. இது அனைத்து தேர்தல்களும் நமக்கு உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறது. இந்த தேர்தலில் கூட திமுகவின் வாக்கு சதவீதம் வெகுவாக சரிந்து இருப்பதை பார்க்க முடியும். திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மக்கள் இனியும் தயாராக இல்லை என்பது இந்த சரிவுக்கு காரணம். 2026 ஆம் ஆண்டு நிச்சயம் கூட்டணி ஆட்சி தான். அதில் எந்த வித வேறுபாடுகளும் கிடையாது. ஒரு திராவிட கட்சியின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் சர்வை சந்தித்துள்ளது. இது நிச்சயம் நடந்து தான் தீரும். அடுத்த தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் 12 சதவீதத்திற்கும் கீழே இருக்கும் .இது நிச்சயம் நடக்கும்.
அந்த இடத்திற்கு வேறு ஒரு கட்சி வரும். 2026 தேர்தல் திராவிட சித்தாந்தங்களுக்கு முடிவு கட்டும் ஆரம்பமாக இருக்கும். 2031 ஆம் ஆண்டில் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகும். இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. குறிப்பிட்ட ஒரு திராவிட கட்சியில் வாக்கு வங்கி சரிந்து வரும் எனக் கூறி இருக்கும் நிலையில் அண்ணாமலை அதிமுகவை கூறுகிறாரா அல்லது திமுகவை கூறுகிறாரா என தெரியவில்லை.
மேலும் அந்த இடத்தில் வேறு ஒரு கட்சி இருக்கும் என கூறுவது தமிழக வெற்றி கழகத்தையா அல்லது பாஜகவையா என்பது தெரியவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்ணாமலையின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications