பாஜக பாலியல் குற்றச்சாட்டு! ‘அந்த’ அமைச்சருக்கு பதவி கொடுத்தீங்களே! கொந்தளித்த நாராயணன் திருப்பதி!
சென்னை : பாஜகவின் உட்கட்சி விவகாரங்களில் தனிமனித விமர்சனங்களில் திமுகவும் முரசொலியும் இறங்குமேயானால் திமுகவில் நிகழும் அவலத்தை பட்டியலிட்டு வெளியிட பாஜகவும் தயங்காது என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் தொடர்ந்து பாஜக மற்றும் அதன் தலைவர்களைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழக பா.ஜ.க. என்றால்...? என்ற தலைப்பில் பல விமர்சனங்கள் பேசப்பட்டு இருந்தது.
அதில்,"பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக நட்டா என்ற ஒருவர் இருக்கிறார். 365 நாட்களுக்கு ஒரு தடவை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் தோன்றுவார். 'தி.மு.க.வை குடும்பக் கட்சி' என்று சொல்லுவார். அதன்பிறகு காணாமல் போய்விடுவார். அடுத்து 365 நாட்கள் கழித்து மறுபடி வருவார். அதையே சொல்வார். காணாமல் போய்விடுவார்!" என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு இருந்தது.
அடுத்த மன்மோகன் சிங்னு நினைப்பா? அரசியலுக்கு ரெடியாகும் ரகுராம் ராஜன்? பாஜக கேள்விக்கு பரபர பதில்
நாராயணன் திருப்பதி
இந்நிலையில் அந்த கருத்துகளுக்கு தமிழக பாஜக துணை தலைவரான நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் நேற்று, "தமிழக பா.ஜ.க. என்றால் ....?" என்ற தலைப்பில் தலையங்கம் படிக்க நேர்ந்தது. அதில் இரு நாட்களுக்கு முன்னர் பா ஜ க தலைவர் ஜெ..பி.நட்டா அவர்கள் கோவையில் பேசியது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பதோடு, பாஜக குறித்து அவதூறான தரக்குறைவான கருத்துக்களை பதிந்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டுகள்
குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும், ரவுடிகள் குறித்தும் பாஜகவில் இருந்தவர்களே சொல்கிறார்கள் என்றும் பாஜக நிர்வாகிகள் குறித்து இணையத்தில் உள்ளன என்றெல்லாம் முரசொலி போன்ற மூன்றாந்தர நாளிதழ் பட்டியலிட்டிருப்பது வியப்பை அளிக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டு குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை இருக்கிறதா? திமுகவில் தலைவர்களாக திகழ்ந்தவர்கள் குறித்த லீலைகளை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தன் 'வனவாசம்' புத்தகத்தில் பிரித்து மேய்ந்திருக்கிறார் என்பதை திமுக மறந்து விடக்கூடாது.
முரசொலி
பாலியல் குற்றச்சாட்டுகளை தங்களின் அடையாளங்களாக கொண்டவர்கள் திமுகவினர் என்பது உலகறிந்த உண்மை என்பதை மறந்து விட்டு, முரசொலி தலையங்கம் 'வாண்டடாக வந்து வண்டியில் ஏறியிருக்கிறது'. குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தவறு நிரூப்பிக்கப்படுகிற நிலையில், அந்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்றும் பாஜக தயங்கியது இல்லை. பாஜக குறித்து இணையதளத்தில் உலவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொழுது போகாமல் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடையும் முரசொலி, மிக ஆபாசமான அருவருக்கத்தக்க செயலை செய்து உலகம் முழுதும் இணையத்தில் உலா வந்த ஒரு நபருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து கொண்டிருக்கும் அலங்கோலத்தை மக்கள் மறந்து விட்டார்கள் என நினைப்பது காலத்தின் கொடுமை.
புரிய வைப்போம்
திமுகவிலிருந்து பாஜகவுக்கு வந்துள்ளவர்கள், பாஜகவின் நாகரீகம் மற்றும் ஒழுக்கம் கருதி திமுகவில் உள்ள சிலரின் அலங்கோலங்களை, தரக்குறைவான நாற்றம் கொண்ட ஒழுங்கீனங்களை, குணக்கேடர்களின் நாற்றமெடுக்கும் வக்கிரங்களை வெளியிட முடியாமல், அமைதி காக்கின்றனர். இனியும் பாஜகவின் உட்கட்சி விவகாரங்களில், தனி மனித விமர்சனங்களில் திமுகவும், முரசொலியும் இறங்குமேயானால் திமுகவில் நிகழும் அவலத்தை பட்டியலிட்டு வெளியிட பாஜகவும் தயங்காது என்பதை முரசொலி புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், புரிய வைப்போம்" என கூறியுள்ளார்.