தாக்கி பேசினாலும், பாஜகவின் தாக்கம் இருக்கும்.. பொங்கல் விழா கொண்டாட்டத்தில் தமிழிசை பஞ்ச்
சென்னை: என்னதான் தாக்கி பேசினாலும் பாஜகவின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும், என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழிசை.
இந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பலவும் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் மேளம் அடித்தும், களரி விளையாடியும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தமிழிசை பேட்டி
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், கூறியதாவது: நீங்கள் என்னதான் தாக்கிப் பேசினாலும், தமிழகத்தில் பாஜகவின் தாக்கம் இருக்கும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் தரவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது எங்கே சென்றன தமிழகத்தில் உள்ள கட்சிகளின் விமர்சனங்கள்? மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளதற்கு தமிழக கட்சிகளின் வரவேற்பு தெரிவிக்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கும், தமிழக கட்சிகள் வரவேற்பு தெரிவிக்கவில்லை. மோடியை எங்கே, நாம் குறை சொல்லலாம் என்று தேடித்தேடி குறை சொல்லி வருகின்றனர் தமிழக கட்சிகள்.
5 லட்சம் கோடி
மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் போது, மேலும் பல நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி அளவிலான நலத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
ஆளுநர் சந்திப்பு
கோடநாடு விவகாரத்தில் ஆளுநரிடம் மனு அளிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்போது கருப்பு கொடியுடன் செல்வாரா, கருப்புக்கொடி இல்லாமல் செல்வாரா. அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் ஆளுநர் மக்கள் பணியாற்ற செல்லும்போது, ஊருக்கு ஊர் கருப்புக் கொடி காட்டினர் திமுகவினர். இப்போது அதே ஆளுநரை சந்திப்பதற்கு ஸ்டாலின் செல்கிறார்.
கோடநாடு விவகாரம்
குற்றவாளிகள் திசை திருப்புவதற்காக கூட எந்தவிதமான குற்றச்சாட்டையும் சொல்ல முடியும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர், கொடநாடு விவகாரத்தை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டு விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ஜி விவகாரத்தில் என்னென்ன கொலைகள் நடந்தன என்பதை எடுத்துக் கொண்டு எதிர் விவாதம் நடத்த முடியும். விசாரணை நடக்கும் குற்றவாளிகள் தண்டனை அனுபவிப்பார்கள். அதைவிடுத்து குற்றச்சாட்டு வந்த உடனேயே, எம்பிக்குதித்து அரசாங்கத்தை கைப்பற்றி விடலாம் என்று நினைப்பது, மனப்பால் குடிப்பது போன்றது ஆகும். கோடநாடு விவரத்தை சட்டரீதியாக தடை தமிழக அரசு கையாண்டு கொண்டிருக்கிறது என்பது எனது கருத்து. இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.