விமானத்தின் என்ஜினில் தீ.. அவசர அவசரமாக தரையிறங்கிய டெல்டா ஏர்லைன்ஸ்.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
வாஷிங்டன்: விமானம் டேக் ஆப் ஆன சிறிது நேரத்தில் என்ஜின் பகுதியில் தீ பற்றி எரிந்ததால் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர ஏர்போர்ட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து அட்லாண்டாவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான DL446 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜின் பகுதியில் தீ பற்றியது. விமானத்தின் இடது பக்க என்ஜினில் பற்றிய தீ நேரம் செல்ல செல்ல அதிகரித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பிடித்து எரியும் வீடியோ காட்சிகள்
உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை அவசர அவசரமாக லேண்டிங் செய்தார். உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த விமானத்தில் 9 விமான சிப்பந்திகள் உள்பட 226 விமான பயணிகள் பயணம் செய்தனர். இவ்விவகாரம் குறித்து விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதாவது:- விமானம் புறப்பட்ட உடனேயே என்ஜின் பகுதியில் தீ பிடித்தது. உடனடியாக விமானிகள் இதைக் கவனித்து விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டனர். விமான கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்ததும், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே வந்தது.
பயணிகள் கூறியது என்ன?
விமான நிலையத்தில் அவசர சேவை அமைப்புகளும் தயார் நிலையில் இருந்தன. விமானம் தரையிறக்கப்பட்டதும், துரிதமாக செயல்பட்ட விமான நிலைய அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் தீ பிடித்தற்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்ஜினில் தீ பிடித்த விமானம், 25 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கூறுகையில், "சூழலை மிக சாதுர்யமாக விமானி கையாண்டார். இதனால், பயணிகள் அச்சப்படாமல் இருந்தோம்" என்று கூறினர்.
அடிக்கடி விபத்தில் சிக்குகிறதா?
டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவன விமானத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம், ஒர்லண்டோ சர்வதேச விமான நிலையத்தில், விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது என்ஜின் பகுதியில் தீ பிடித்தது. அந்த விமானத்தில் 282 பயணிகள் 10 விமான சிப்பந்திகள், இரண்டு விமானிகள் இருந்தனர். எனினும், யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. சமீப காலமாக அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஆகியவற்றில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் சிக்குவது அதன் பராமரிப்பு உள்ளிட்டவற்றை கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications