தலைமை செயலகத்தில் வெடிகுண்டு? பதறிய சென்னை.. சல்லடை போட்ட பாம் ஸ்குவாடு.. கடலூரில் சிக்கிய புள்ளி!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தனியார் செய்தி தொலைக்காட்சியை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

உடனே காவல்துறை சார்பில் துரிதமாக தகவல் அளிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில் முதல், முக்கிய அறைகள், சட்டப்பேரவை அறைகள் என அனைத்திலும் சோதனை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் எங்கும் வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.
இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மொபைல் போன் நம்பர் விவரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தான், செய்தி தொலைக்காட்சிக்கு போன் செய்து, தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பிரகாஷ், மனநலம் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications