பெரியாளானதும் மறந்துட்டாங்க! நடிகர் சூரியை கடுமையாக விமர்சித்த போண்டாமணி! நடந்தது என்ன?
சென்னை: தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருந்த நிலையில் நடிகர் மயில்சாமி இறந்துவிட்டதால் தன்னால் அந்த சிகிச்சையை செய்ய முடியவில்லை என நடிகர் போண்டாமணி தெரிவித்திருந்த பேட்டி வைரலாகி வருகிறது.
இலங்கையை சேர்ந்தவர் போண்டாமணி. இவரது தனித்துவ நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சால் காமெடியில் கலக்கினார். இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து காமெடியில் நடித்துள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு தமிழக அரசு உதவி செய்தது. அத்துடன் சில நடிகர்களும் அவருடைய சிகிச்சைக்கு பண உதவி செய்தனர். இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.
போண்டாமணியின் மகளுக்கு ஐசரி கணேஷ் தனது கல்லூரியில் சீட்டு கொடுத்துள்ளார். போண்டாமணியின் மனைவி மாற்றுத் திறனாளி. இதனால் அவர் மட்டுமே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. அடிக்கடி வாய்ப்பு கொடுத்து வந்த விவேக்கும் மறைந்துவிட்டார். வடிவேலை எடுத்துக் கொண்டால் அவருக்கே வாய்ப்பில்லை என்கிறார்.
இதனால் அவர்களின் நகைச்சுவை குழு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சில நிகழ்ச்சிகளில் போண்டாமணி கலந்து கொண்டு வருமானம் ஈட்டி வந்தார். அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்திருந்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு அவரது வீட்டில் போண்டாமணியின் உயிர் பிரிந்தது.
அவருடைய இறுதிச் சடங்கு இன்றைய தினம் நடைபெறுகிறது. இந்த நிலையில் போண்டாமணி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உடம்பு இப்போ பரவாயில்லை. டயாலிசிஸ் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. 2 மாதத்தில் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள்.
70 வயதுக்காரரின் சிறுநீரகம் கிடைத்தது. ஆனால் நான் வேண்டாம் என கூறிவிட்டேன். 40 முதல் 50 வயதினரது கிட்னியை பார்த்து வருகிறோம். எனக்கு சிறுநீரகம் கொடுத்து உதவ யாரும் இல்லை. நான் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அங்க போய்தான் ஆபரேஷன் செய்யணும். அரசு விதிகள் எல்லாம் நிறைய இருக்கு. தமிழக அரசிடம் நான் சிறுநீரக மாற்றுக்காக பதிவு செய்திருக்கிறேன். எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.
எஸ்ஆர்எம் கல்லூரியில் மயில்சாமி ஏற்பாடு செய்திருந்த மருத்துவரிடம்தான் சிகிச்சை பெற்று வருகிறேன். மூளைக்காய்ச்சல், விபத்தில் இறப்பவர்கள் வந்தால் அவர்களுடைய சிறுநீரகத்தை தானமாக பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்கள். ஒரு மாதத்தில் கிடைத்தாலும் கிடைக்கும். ஆனால் என் போதாத காலம் மயில்சாமி இறந்துவிட்டார். இவர் இருந்திருந்தால் நான் யாரிடமும் அலைய வேண்டிய நிலையே இல்லை.
அவரே எனது ஆபரேஷனுக்கு பணம் கொடுத்திருப்பார். மயில்சாமி அண்ணன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கூட என்னை கவனிக்க யாரும் இல்லை என பேட்டி கொடுத்திருந்தேன். அதை மயில்சாமி அண்ணன் பார்த்துவிட்டு என்னிடம் கவலைப்படாத, எல்லாத்தையும் பார்த்துகலாம், யாரையும் தப்பா பேசாத, நாம என்ன அவங்ககிட்ட கொடுத்தா வைத்திருக்கோம். அதனால் ரிலாக்ஸ்டா இரு என்றார்.
மேலும் ஆபரேஷனுக்கு தேதியை குறி, பணத்தை ரெடி செய்துடலாம் என்றார். அவர் இறந்துவிட்டார். என் ஆபரேஷனுக்கு 8 லட்சம் செலவாகும். என் மனைவி மூலம் கடிதம் எழுதி ஐசரி கணேஷ், அஜித், விஜய், பார்த்திபன், சிவகார்த்திகேயன், லாரன்ஸ், ரஜினி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினேன்.
இதையடுத்து ஐசரி கணேஷ் சார் தொடர்பு கொண்டு கவலைப்படாதீங்க, எப்போ ஆபரேஷன்னு சொல்லுங்க பார்த்துகலாம் என்றார். அது போல் ரஜினி சாரும் என்னிடம் போனில் பேசி முதலில் ரூ 1 லட்சத்தை அனுப்பியிருந்தார். வடிவேல் கூட நடித்து பேர் கிடைச்சது. ஆனால் ஊதியம் குறைவுதான்.
சூரி என் வீட்டுல சாப்பிட்டு தங்குனவர்தான். ஆனால் இன்று பெரியாளானதும் என்னை கண்டுக்கலை. ஒரு போன் செய்து கூட என் உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. காமெடி தொடரில் நடிக்க காதல் சுகுமாரும் நானும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அதையும் மறந்துவிட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications