"புத்தக தான அரங்கு" புத்தக கண்காட்சி செல்வோர் கவனத்திற்கு.. சிறைத்துறையின் அருமையான முயற்சி!
சென்னை: சென்னையில் 46வது புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தக தான அரங்கு புத்தக வாசர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அரங்கு மூலமாக வாசகர்களிடம் இருந்து பெறப்படும் புத்தகங்கள், சிறைவாசிகள் வாசிப்பதற்காக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதினை வழங்கினார்.
வரும் 22ம் தேதி வரை நடக்க உள்ள புத்த கண்காட்சி, ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
புத்தகம் வாசிப்பை நேசித்த திருமகன் ஈவெரா! வாழ வேண்டிய வயதில் மரணத்தை தழுவிய இளங்கோவன் மகன்
1,000 அரங்குகள்
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 1,000 அரங்குகள் உள்ளன. அதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்குகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர்.
புத்தக தான அரங்கு
இன்று வார இறுதி என்பதால், புத்தக கண்காட்சி தொடக்கம் முதலே பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதில் 238ம் நம்பரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படாமல், புத்தகங்கள் வாங்கி வைக்கப்படுகின்றன. அதாவது "புத்தக தானம்" என்ற பெயரில் சிறைத்துறை சார்பாக அமைக்கப்பட்டு புத்தக வாசகர்களிடமிருந்து தானமாக புத்தகங்கள் பெறப்படுகின்றன.
சிறைவாசிகள்
இந்த அரங்கில் தானமாக அளிக்கப்படும் புத்தகங்கள், சிறைவாசிகள் வாசிப்பதற்காக வழங்கப்பட உள்ளன. சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு, சிறையை போலவே அமைக்கப்பட்டுள்ளது பலரையும் ஈர்த்துள்ளது. இதனை அறிந்துகொள்ளும் வாசகர்கள் ஏராளமானோர் சிறைவாசிகள் படிப்பதற்காக புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.
இது முதல்முறையா?
மக்கள் வியக்கும் புத்தகங்களும், அரிய பெரிய தத்துவமும் பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்த போதே எழுதப்பட்டது. குறிப்பாக மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த போது எழுதிய புத்தகங்கள் இன்னும் புத்தக வாசிப்பாளர்களால் வியந்து பேசப்படும். இந்த நிலையில், சிறைத்துறை சார்பில் புத்தக கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு புத்தகங்கள் தானமாக பெறுவது வாசகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2022ம் ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியிலும் புத்தக தான அரங்கு அமைக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது பெறப்பட்ட புத்தகங்கள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.