ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழகத்தில் துடைப்பம் யாத்திரை... டிசம்பர் 13-ல் மதுரையில் தொடங்குகிறது..!
சென்னை: ஆம் ஆத்மி கட்சி சார்பில் வரும் 13-ம் தேதி மதுரையில் துடைப்பம் யாத்திரை தொடங்கப்படவுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன் தலைமையில் தொடங்கும் இந்த யாத்திரை ஊழலை ஒழிப்பதற்கானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ல் தமிழகத்தில் நல்லாட்சியை அமைப்போம் என்பதை கொள்கை முழக்கமாக கொண்டு இந்த யாத்திரை நடத்தப்படவுள்ளது.

மதுரையில் தொடங்கும் துடைப்பம் யாத்திரை தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்கள் வழியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே காவல்துறை தரப்பில் ஆம் ஆத்மி தொடங்கும் துடைப்பம் யாத்திரைக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருவதால் திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பரப்புரையை தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியினரும் தங்கள் பங்குக்கு துடைப்பம் யாத்திரையை தொடங்க உள்ளார்கள்.
இதில் குறிப்பிடவேண்டியவை என்னவென்றால் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்ப என்பதால் அந்தக் கட்சியினர் தங்கள் கட்சி சின்னத்தின் பெயரில் யாத்திரை நடத்தவுள்ளார்கள். இதனிடையே இந்த யாத்திரைக்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா கால பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில் கடைபிடித்து துடைப்பம் யாத்திரையை நடத்துவோம் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது நண்பர் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது தனது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு ஆதரவு நல்குகிறாரா என்பது பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications